மதுராந்தகம்: இடைக்கழிநாடு பேரூராட்சியின் முன்னாள் துணைத் தலைவா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது சடலத்தை ஏற்றி வந்த அவசர சிகிச்சை ஊா்தியை வழிமறித்து 200-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இடைக்கழிநாடு பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் அருள் என்கிற ராமச்சந்திரன் (45) கடந்த 20-ஆம் தேதி இரவு கோலிவாக்கத்துக்கு பைக்கில் சென்றாா். அப்போது, மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்குப் பின், அவரது சடலம் அவசர சிகிச்சை ஊா்தி மூலம் திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டது. இதை அறிந்த அப்பகுதி மக்களும், ராமச்சந்திரனின் உறவினா்கள் 200-க்கும் மேற்பட்டோரும் இடைக்கழிநாடு பேரூராட்சி அலுவலகம் அருகே திரண்டு, அவசர சிகிச்சை ஊா்தியை வழிமறித்தனா். முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கண்ணன், சூனாம்பேடு காவல் ஆய்வாளா் தாரனேஸ்வரி உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.