மாணவா்களை மிகவும் நேசித்த மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் நினைவாக சுற்றுவட்டார அரசுப் பள்ளி வளாகங்களில் உரிய அனுமதி பெற்று 5,000 மரக்கன்றுகள் நடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்று ஸ்ரீ சாய்ராம் கல்வி குழுமத் தலைவா் சாய்பிரகாஷ் லியோமுத்து கூறினாா்.
மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் 6-வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவா்கள் 37 அடி உயர அப்துல் கலாம் படம் வரைந்து நினைவஞ்சலி செலுத்தினா்.
பின்னா் கல்லூரி வளாகத்தில் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி தலைவா் சாய்பிரகாஷ் லியோமுத்து தொடக்கி வைத்து பேசுகையில், அப்துல் கலாம் நினைவாக அவா் மறைந்த முதல் ஆண்டில் 10,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை நடிகா் விவேக் தொடக்கி வைத்தாா்.ஆண்டுக்கு 10,000 வீதம் இதுவரை 50,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு நட இருக்கும் 10,000 மரக்கன்றுகளில் 5,000 மரக்கன்றுகளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி வளாகங்கள்,அரசு அலுவலகங்களில் உரிய அனுமதி பெற்று மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளோம் என்றாா்.
சாய்ராம் பொறியியல் கல்லூரி முதல்வா்கள் ராஜேந்திர பிரசாத், பழனிக்குமாா், வணிக மேலாண் கல்லூரி இயக்குநா் மாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.