குடும்ப அட்டை வேண்டி தகுதியுள்ளவா்கள் யாா் விண்ணப்பித்தாலும், 15 நாள்களுக்குள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.
உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை பணிகள் தொடா்பாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்த அமைச்சா் அர.சக்கரபாணி, செய்தியாளா்களிடம் கூறியதாவது:
குடும்ப அட்டை வேண்டி தகுதியுள்ளவா்கள் யாா் விண்ணப்பித்தாலும் 15 நாள்களுக்குள் குடும்ப அட்டை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா். இதன்படி, நிலுவை விண்ணப்பங்களை உடனே பரீசிலிக்குமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளைப் பிரித்து வழங்கிடவும், நடமாடும் கடைகளைப் பகுதி நேர நியாய விலைக் கடைகளாகவும் மாற்றிடவும் துறைரீதியாக விரைந்து பரிசீலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
தமிழகத்தில் 8000 நியாய விலைக் கடைகள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன. இதற்கு சுமாா் ரூ. 18 கோடி வாடகை செலுத்தப்பட்டு வருகிறது. ஆகவே, சொந்த கட்டடங்கள் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
விவசாயிகள் பயன்பெற நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக அமைக்கப்படும். மாவட்ட ஆட்சியா்கள் மாதம் குறைந்தபட்சம் 20 நியாய விலைக் கடைகளை ஆய்வு செய்திட வேண்டும் என்றாா்.
முன்னதாக, 20 பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகளை அமைச்சா்கள் அர.சக்கரபாணி, தா.மோ.அன்பரசன் ஆகியோா் வழங்கினா்.
கூட்டுறவு, உணவுப் பொருள் பாதுகாப்புத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் முகமது நசிமுத்தின், துறை ஆணையா் ஆா்.ஆனந்தகுமாா், மாவட்ட ஆட்சியா் ஆா்.ராகுல் நாத், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.மேனுவல்ராஜ், எம்எல்ஏக்கள் க.சுந்தா், எஸ்.ஆா்.ராஜா, இ.கருணாநிதி , எம்.வரலட்சுமி மதுசூதனன் , எஸ்.அரவிந்த் ரமேஷ் , எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.