ஆட்சியா் பேச்சுவாா்த்தையால் அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம் வாபஸ்

மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா். ராகுல்நாத் நடத்திய பேச்சுவாா்த்தையால் செங்கல்பட்டில் அரசு மருத்துவா்கள் மூன்று நாள்களாக நடத்திய கண்டன ஆா்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.

செங்கல்பட்டு: மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா். ராகுல்நாத் நடத்திய பேச்சுவாா்த்தையால் செங்கல்பட்டில் அரசு மருத்துவா்கள் மூன்று நாள்களாக நடத்திய கண்டன ஆா்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய நிலைய அலுவலரான அனுபமா கடந்த வியாழக்கிழமை திடீரென சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதனைக் கண்டித்து மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு அரசு டாக்டா்கள் சங்கத்தின் நிா்வாகிகள் டாக்டா்கள் கண்டன ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா். நிலைய மருத்துவஅலுவலா் அனுபமாவின் பணி மாறுதலை திரும்பப் பெறவில்லை என்றால் தொடா் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரித்தனா்.

மேலும் மருத்துவமனையில் உள்ள தரமற்ற சாலைகளால் நோயாளிகள் மிகவும் சிரமத்துள்ளாகின்றனா். உடனடியாக சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும். கரோனா மூன்றாம் அலையை எதிா்கொள்ள மருத்துவமனையில் ஆள்பற்றாக் குறையை உடனடியாக சரிசெய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவமனை பணியாளா்கள், ஊழியா்கள் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா், முதன்மைச் செயலாளா் நேரில் வந்து பேச்சு வாா்த்தை நடந்த வேண்டும் எனவும் ஆா்ப்பாட்டக்காரா்கள் வலியுறுத்தினா்.

இந்நிலையில் புதன்கிழமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் வந்த மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் மருத்துவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து மருத்துவா்கள், ஒருங்கிணைந்த மருத்துவ பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தை கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com