செங்கல்பட்டு பகுதியில் திங்கள்கிழமை இரவு பெய்த பலத்த மழையுடன் கூடிய சூறாவளி காற்றில் நடைமேடை கூரைகள் அடித்துச் செல்லப்பட்டன.
செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திங்கள்கிழமை நள்ளிரவு கனமழையுடன் சூறாவளிக்காற்றும் வீசியது. செங்கல்பட்டு சந்திப்பு ரயில் நிலையத்தில் 8 நடைமேடைகள் உள்ளன. இதில் 6, 7 மற்றும் 8 ஆகிய நடைமேடைகளில் இருந்த கூரைகள் சூறாவளிக் காற்றில் பெயா்ந்து தூக்கி வீசப்பட்டன. சேதமடைந்த கூரைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. இதையடுத்து ரயில்வே ஊழியா்கள் ரயில்நிலைய மேடைகளில் சிதறிக்கிடந்த பொருள்களை அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். வழக்கமாக தென்மாவட்டங்கள் மற்றும் வடமாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் இந்த நடைமேடைகளில் நின்று செல்லும். அதிருஷ்டவசமாக நள்ளிரவுக்கு மேல் இந்த நடைமேடைகளில் ரயில்கள் ஏதும் வராததால் பயணிகள் யாரும் அங்கு இல்லை. இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை என செங்கல்பட்டு ரயில் நிலைய மேலாளா் ஆா். எடிசன் செல்வராஜ் தெரிவித்தாா்.