சென்னை, ஆக. 21: போலி சான்றிதழ் உள்ளிட்ட முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில், புகைப்படம் ஒட்டி மதிப்பெண் சான்றிதழ் தர அரசு பரிசீலித்து வருகிறது.
முதற்கட்டமாக பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் இம்முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தற்போது, தமிழகத்தில் உள்ள உயர்நிலை- மேல்நிலைப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளின் பெயர் விவரம், பள்ளிகளின் பெயர் விவரம் உள்ளிட்ட விவரங்கள், ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒட்டுமொத்தமாகத் தொகுத்து வைக்கப்படுகிறது.
பின்னர் அவை சென்னையில் உள்ள தகவல் தொகுப்பு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஊழியர்கள் மூலம் சரிபார்க்கப்படுகிறது. இதற்கு அதிக நேரம் விரயமாகிறது. ஆள்கள் மூலம் பணி மேற்கொள்ளப்படுவதால், லட்சக்கணக்கான மாணவ- மாணவிகளின் பெயர், பள்ளி விவரங்களை சரிபார்த்தலின்போது தவறு ஏற்படுகிறது. இதனால் பெயர் குளறுபடிகள், மதிப்பெண்களில் மாற்றம் ஆகிய தவறுகளும் ஏற்படுகின்றன.
இம்மாதிரியான தவறுகளைத் தவிர்த்திடும் வகையில் "ஐசிஆர்-இன்டெலிஜென்ட் கேரக்டர் ரெகக்னிஷன்' முறையில் மாணவ- மாணவிகளின் பெயர் விவரம், மதிப்பெண் விவரங்களை தவறு இல்லாமல் சான்றிதழ்களில் பதிவு செய்திட அரசு பரிசீலித்து வருகிறது. இதற்காக பள்ளிக் கல்வி, அரசுத் தேர்வுகள் இயக்கக அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக பிளஸ் 2-வில்...: சிலர் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் மூலம் லைசென்ஸ், பாஸ்போர்ட் போன்றவற்றை எடுக்கின்றனர். இன்னும் சிலர் அரசு மற்றும் தனியார் துறைகளில் போலி மதிப்பெண் சான்றிதழைக் காட்டி வேலைவாய்ப்பைப் பெறும் சூழல் நிலவுகிறது. இம்மாதிரியான முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில், புகைப்படம் ஒட்டி மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் முறையை செயல்படுத்திட அரசு பரிசீலனை செய்து வருகிறது. முதற்கட்டமாக வரும் ஆண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.