சென்னையில் 1600 இடங்களில் புகார் பெட்டி: காவல் துறை புதிய திட்டம்

குற்றங்களைக் குறைப்பதற்காக சென்னையில் 1600 இடங்களில் புகார் பெட்டி வைப்பதற்கு பெருநகர காவல் துறை திட்டமிட்டுள்ளது.
சென்னையில் 1600 இடங்களில் புகார் பெட்டி: காவல் துறை புதிய திட்டம்
Updated on
2 min read

குற்றங்களைக் குறைப்பதற்காக சென்னையில் 1600 இடங்களில் புகார் பெட்டி வைப்பதற்கு பெருநகர காவல் துறை திட்டமிட்டுள்ளது.

சென்னையில் அண்மைகாலமாக குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குற்றங்களுக்கான காரணத்தை ஆரம்பத்திலேயே கண்டறியாமல் இருப்பதே அவை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் காவல் துறைக்கும், பொதுமக்களுக்கும் இடையே இடைவெளி அதிகரித்து வருவதும் மற்றொரு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட குற்றங்களின் வகைகள் மாறி வருவதால், அவற்றை காவல் துறை கணிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

அதேவேளையில் காவல் துறையினரும் தங்களது அணுகுமுறையை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு பெருநகர காவல் துறை அதிகாரிகளுடன் ஆணையர் ûஎஸ்.ஜார்ஜ் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுமக்கள் காவல் துறையை தொடர்பு கொள்ளும் வகையிலும், சிறிய அளவிலான பிரச்னைகள் குறித்த தகவல்களை உடனடியாக தெரிந்து கொள்ளும் வகையிலும் பொது இடங்களில் புகார் பெட்டியை வைப்பது என முடிவு செய்யப்பட்டது. முன்னதாக புகார் பெட்டியை சில இடங்களில் வைத்து அதற்கு மக்கள் எப்படி ஆதரவளிக்கின்றனர் என்பதைக் கண்டறிய அதிகாரிகள் முடிவு செய்தனர்.

பொது இடங்களில் புகார் பெட்டிகள்: அரசு மருத்துவமனைகள், பஸ் நிறுத்தங்கள், புறக்காவல் நிலையங்கள், கோயில்கள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட பொது இடங்களில் புகார் பெட்டிகளை வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி சென்னை முழுவதும் சுமார் 1600 இடங்களில் புகார் பெட்டியை வைக்க திட்டமிட்டு இருப்பதாக பெருநகர காவல் துறையின் உயர் அதிகாரி தெரிவித்தார்.

ஒரு காவல் நிலையத்துக்கு குறைந்தது 12 இடங்களில் புகார் பெட்டியை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் காவல் நிலையங்களின் எல்லையைப் பொறுத்து இந்த விகிதம் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது என அவர் கூறினார்.

முன்னோட்டம்: புகார் பெட்டிகள் மூலம் ரௌடிகள் தொல்லை, சூதாட்டம், பாலியல் தொந்தரவு, பாலியல் தொழில், குடும்பப் பிரச்னைகள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் மது மற்றும் போதைப் பொருள்கள் விற்பனை உள்ளிட்ட சமூக விரோதச் செயல்கள் குறித்த தகவல்கள் தங்களுக்கு உடனடியாக கிடைக்கும் என காவல் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

இப்போது இத் திட்டம் வியாசர்பாடி பகுதியில் கடந்த 2 நாள்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் சுமார் 15 இடங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு 2 வாரங்கள் முன்னோட்டமாக செயல்படுத்தி அதன் முடிவைப் பொருத்து இத் திட்டத்தை இதர பகுதிகளில் செயல்படுத்த காவல் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இப்போது அமைக்கப்பட்டுள்ள புகார் பெட்டிகளில் போடப்படும் கடிதங்களை நாள்தோறும் காலை 7 மணிக்கு எடுத்து இதற்கென நியமிக்கப்பட்ட காவலர், அந்தப் பகுதி இன்ஸ்பெக்டரிடம் கொடுக்கிறார். அந்தக் கடிதங்களின் தன்மை பொருத்து இன்ஸ்பெக்டர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இத் திட்டத்தின் மூலம் குற்றங்கள் 10 சதவீதம் குறைந்தால்கூட, அது வெற்றித்தான் என பெருநகர காவல் துறையின் உயர் அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com