ஈரோடு மாவட்டத்திலுள்ள சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசு கல்லூரியாக்க வேண்டும் என்ற கோரிக்கை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சி கொறடா வி.சி.சந்திரகுமார் அதுகுறித்த கேள்வியை எழுப்பினார். ஈரோட்டிலுள்ள சிக்கய்ய நாயக்கர் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது எனவும், அந்தக் கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, அதை அரசு கல்லூரியாக அறிவிக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், அரசு உதவி பெறும் கல்லூரியை, அரசுக் கல்லூரியாக மாற்றுவதற்கு, கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டும். இந்த கோரிக்கை தொடர்பாக எதிர்காலத்தில் சிந்தித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று தமிழக அரசு முடிவெடுக்கும் என்றார்.