புத்தகத் திருவிழா புகட்டும் பாடம்!

தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் (பபாசி) கடந்த 1976- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, அதே ஆண்டில் முதல் புத்தகக் காட்சி நடைபெற்றது.
புத்தகத் திருவிழா புகட்டும் பாடம்!
Updated on
1 min read

தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் (பபாசி) கடந்த 1976- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, அதே ஆண்டில் முதல் புத்தகக் காட்சி நடைபெற்றது.

சென்னை காயிதேமில்லத் கல்லூரி வளாகத்தில் 45 அரங்குகளுடன் ஒரு வாரம் நடைபெற்ற கண்காட்சியில் தமிழை விட ஆங்கில நூல்களை விற்பனை செய்த அரங்குகளே அதிகம்.

அப்போதைய வாசகர்களில் பெரும்பாலானோர் நாவல்களையே விரும்பி வாங்கியதாகக் கூறுகிறார் அதில் பங்கேற்ற தற்போதைய பபாசி துணை இணைச்செயலரான ஆடம் சாக்ரட்டீஸ்.

பாரதியார், பாரதிதாசன் கவிதை உள்ளிட்ட படைப்புகளுடன் கல்கி, தீபம் நா.பார்த்தசாரதி, லட்சுமி, ரமணிச்சந்திரன் ஆகியோரின் நாவல்கள், நவீன இலக்கியங்கள் அதிகம் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு வரை நவீன இலக்கியத்துடன், ஆன்மிகம், சித்த மருத்துவம், ஜோதிடம், சமையல் குறிப்பு நூல்களும் அதிகம் விற்றன.

தற்போது 38 ஆண்டுகள் கடந்த நிலையில் 750 அரங்குகளுடன் சென்னைப் புத்தகத் திருவிழாவுக்கு கடந்த 12 நாள்களாக சுமார் 6 லட்சம் பேர் வந்துள்ளனர். அதில் கல்கி, சாண்டில்யன், பாலகுமாரன், ஜெயகாந்தன் நூல்களும், நவீன இலக்கியத்தில் வைரமுத்துவின் "கள்ளிக்காட்டு இதிகாசம்', "கருவாச்சி காவியம்' உள்ளிட்டவையும், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் நூல்களும் அதிகம் விற்றதாக பதிப்பாளர்கள் தெரிவித்தனர்.

கவிதை வாசிப்பு குறைந்து நாவல் வாசிப்பு அதிகமாகியுள்ளது என்றும், குருதிக் களத்தில் படம் பிடித்தவர்கள்' என்ற நூல் அதிகமாக விற்றுள்ளது என்று கவிதா பதிப்பகத்தின் உரிமையாளர் சேது சொக்கலிங்கம் தெரிவித்தார்.

விற்பனையில், புகழ் பெற்ற தலைவர்கள், தேசியத் தலைவர்கள், அரசர்களின் வரலாறு, தொல்லியல் ஆய்வுகள், திருக்குறள், வரலாறு சார்ந்த நாவல்கள், சித்த மருத்துவம், குழந்தை இலக்கியம் ஆகியவை அதிகம் விற்றுள்ளது என்கிறார் ஸ்ரீ செண்பகம் பதிப்பக உரிமையாளர் ஆர்.எஸ்.சண்முகம்.

மேலும், வாசகர்கள் எதிர்பார்க்கும் வரலாற்று நாவல், குழந்தை இலக்கிய எழுத்தாளர் தளத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து கவிஞர் வைரமுத்துவிடம் கேட்டபோது, தனிப்பட்ட எழுத்தாளன் எனும் முறையில் எனது நூல்களும் அதிகம் விற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியதே! தற்போது தேர்ந்தெடுத்து படிக்கும் வாசகர்கள் அதிகம் என்றார்.

மதுரை வரலாற்றை மையப்படுத்திய காவல் கோட்டம் நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் கூறுகையில், "வரலாற்றை அறிவதில் நாம் ஒவ்வொருவரும் ஆர்வம் காட்டுவது இயல்பு. வாசகர்கள் கடந்த 1970 -ஆம் ஆண்டில் வரலாற்றைப் பார்த்த பார்வை இப்போது இல்லை. ஆய்வுக்குரிய வரலாறுகளை வாசகர்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்றார்.

தற்போதைய புத்தகத் திருவிழா மூலம், கலாசார மரபு சார்ந்த வரலாறு, கலை, இலக்கியத்தை இளந்தலைமுறை விரும்புகிறது.

ஆகவே சமூகம் சார்ந்த உண்மை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட கலாசாரம் அடிப்படையிலான படைப்புகளை மக்கள் எப்போதும் வரவேற்பார்கள் என்பது பெரும்பாலான வாசகர்களின் கருத்தாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com