திரிசங்கு நிலையில் 800 காவலர்கள்!

சென்னை ஆயுதப்படையில் உள்ள 800 காவலர்கள் பணியிட மாறுதலாகி செல்ல 5 மாதங்களுக்கு முன்பே உத்தரவிடப்பட்டனர்.
திரிசங்கு நிலையில் 800 காவலர்கள்!
Updated on
2 min read

சென்னை ஆயுதப்படையில் உள்ள 800 காவலர்கள் பணியிட மாறுதலாகி செல்ல 5 மாதங்களுக்கு முன்பே உத்தரவிடப்பட்டனர். இருந்தும், அவர்கள் விடுவிக்கப்படாமல் உள்ளதால், திரிசங்கு நிலையில் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை பெருநகர காவல்துறையில் மொத்தமுள்ள 12 ஆயிரம் காவலர்களில், ஆயுதப்படையில் மட்டும் 4 ஆயிரம் பேர் இருக்கின்றனர்.
இரு துணை ஆணையர்கள், 5 உதவி ஆணையர்கள் ஆகியோரின் கீழ் செயல்படும், ஆயுதப்படைக்கு பரங்கிமலை, எழும்பூர் புதுப்பேட்டை ஆகிய இடங்களில் முகாம் அலுவலகங்கள் செயல்படுகின்றன.
அரசியல் கட்சித் தலைவர்களின் பாதுகாப்பு, போராட்டங்களுக்கு பாதுகாப்பு, கைதிகளை பாதுகாப்பாக நீதிமன்றம் அழைத்துச் செல்லுதல், முக்கிய இடங்களில் அன்றாட பாதுகாப்பு, திருவிழாக்கள்-அரசு விழாக்கள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு வழங்குதல் உள்ளிட்ட பல பணிகளை செய்து வருகின்றனர்.
சென்னையில் ஆயுதப்படையின் துணையில்லாமல் ஒரு மணிநேரத்தை கூட நகர்த்த முடியாதளவுக்கு, அவர்களின் பங்கு உள்ளது என்று பெருநகர காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளே கூறுகின்றனர்.
இந்த ஆயுதப்படையில் பணிமூப்பு அடிப்படையில் 800 பேரை அவர்கள் கேட்ட மாநகர, மாவட்ட காவல்துறையின் ஆயுதப்படைக்கு பணியிட மாறுதல் செய்து தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி. கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டார்.
இதற்காக நிர்வாகப் பிரிவு ஏடிஜிபி தலைமையிலான குழு பரிந்துரை செய்த காவலர்களுக்கே இந்த பணியிட மாறுதல் வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.
திரிசங்கு நிலையில் காவலர்கள்: பணியிட மாறுதல் கிடைத்தவர்கள் தங்களது குடும்பத்தினரை மாறுதல் கிடைத்த ஊருக்கு இடமாற்றினர். மேலும், பலர் மாறுதல் கிடைத்த ஊரில் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்த்தனர். இவ்வாறு மாறுதல் கிடைத்த அனைத்து காவலர்களும், தாங்கள் மாறுதலாகி செல்லும் ஊர்களில் வசிக்க தேவையான ஏற்பாடுகளை செய்தனர்.
ஆனால் பணியிட மாறுதல் உத்தரவு கிடைத்த அவர்களுக்கு, சென்னை ஆயுதப்படையில் இருந்து விடுவித்து வழங்கும் உத்தரவு கிடைக்கவில்லை. இந்த உத்தரவு இருந்தால்தான், மாறுதல் செய்யப்பட்ட ஆயுதப்படையில் சேர முடியும் என்பதால் காவலர்கள் திரிசங்கு நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதுகுறித்து காவல் துறையின் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால், சில மாதங்களாகியும் உத்தரவு இன்னும் வழங்கப்படவில்லை.
பணியிட மாறுதல் கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் குடும்பத்தை அந்த ஊருக்கு மாற்றியதாலும், குழந்தைகளை அங்கு பள்ளிகளில் சேர்த்ததாலும், பொருளாதார சிக்கல் உள்பட பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிப்பதாக சில ஆயுதப்படை காவலர்கள் கூறுகின்றனர்.
காலிப்பணியிடங்கள் குறைவா? ஆயுதப்படையில் காவலர்கள் பற்றாக்குறை இருப்பதால் விடுவிக்க தாமதம் ஏற்படுவதாக பெருநகர காவல்துறை முதலில் தெரிவித்தது. இதற்கிடையே தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் இருந்து 3 ஆயிரம் காவலர்கள் ஆயுதப்படைக்கு கடந்த மாதத்தில் வந்தனர். இதனால் காலி பணியிடங்கள் சுமார் 5 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் பிற மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை ஆயுதப்படையில் இருந்து சென்னை ஆயுதப்படைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்ட 800 காவலர்கள், படிப்படியாக சென்னை ஆயுதப்படையில் சேர்ந்துவிட்டனர்" என காவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக மாநகர காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே அவர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com