சென்னை அண்ணா நகர், ஷெனாய் நகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் கடந்த சில நாள்களுக்கு முன் ஏற்பட்ட விரிசல் குறித்து ஆய்வு செய்த ஐஐடி நிபுணர் குழு, "மெட்ரோ ரயில்களை இயக்குவதால் வீடுகளில் விரிசல் ஏற்படவில்லை' என அக்குழுவினர் தெரிவித்தனர்.
திருமங்கலம் -நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் சேவை கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. இந்த வழித்தடத்தில் ஷெனாய் நகர், அண்ணா நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் சுரங்கப் பாதையில் உள்ளன. சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில்கள் செல்லும்போது ஷெனாய் நகர், திரு.வி.க. நகர் குடியிருப்பு பகுதிகளில் அதிர்வு ஏற்படுவதாக பொதுமக்கள் கூறி வந்தனர். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் மீண்டும் அந்த பகுதியில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர். இதையடுத்து, ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் விரிசல் ஏற்பட்ட குடியிருப்புப் பகுதியில் நிலஅதிர்வு மீட்டரைப் பொருத்தி அதிர்வைக் கணக்கிட்டனர்.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
அண்ணா நகர், ஷெனாய் நகர் பகுதிகளில் உள்ள சில வீடுகளில் அதிர்வும், விரிசலும் ஏற்பட்டதாகப் புகார் பெறப்பட்டது. இதனையடுத்து ஐ.ஐ.டி. பேராசிரியர் குழு வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மெட்ரோ ரயில் இயங்குவதால் விரிசலும், அதிர்வும் ஏற்படவில்லை என தெரிய வந்தது. ஆனால், இன்னும் இரு தினங்களுக்கு தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு, அறிக்கை பெறப்பட்டு அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
இப்பகுதிகளில் உள்ள 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மெட்ரோ சுரங்கப்பாதை பணிகள் நடந்தபோது விரிசல் ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் அதனை சரி செய்தனர்என்பது குறிப்பிடத்தக்கது.