சென்னை வேளச்சேரி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவது குறித்து தமிழக அரசு 4 வார காலத்துக்குள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் வேளச்சேரி, சோழிங்கநல்லூர், தரமணி, பெருங்குடி, கல்லுக்குட்டை மற்றும் ஐஐடி உள்ளிட்ட இடங்களில் அந்த பகுதிகளில் வசிக்கும் பலர் மழைநீர் வடிகால்களை ஆக்கிரமித்துக் கட்டடங்களைக் கட்டியுள்ளதாக ஒரு நாளிதழில் செய்தி வெளியானது. இந்த செய்தியை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், நீதிபதி பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சோழிங்கநல்லூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவது குறித்து தமிழக அரசு 4 வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும்.
மேலும் மழைநீர் வடிகால்கள், நீர் நிலைகள் மற்றும் கால்வாய்களை மீட்டு, மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது குறித்தும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜூன் 7 - ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









