இருதய ரத்தக் குழாய் முழு அடைப்பை அறுவை சிகிச்சையின்றி குணப்படுத்த முடியும் என்று ஜப்பான் இருதய சிகிச்சை நிபுணர் தகாஹிடே சுசுகி கூறினார்.
இதயத்துக்கு ரத்தத்தை விநியோகிக்கும் மூன்று கரோனரி ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் நிலையில், அடைப்பின் விகிதத்துக்கு ஏற்ப ஆஞ்சியோ பிளாஸ்ட்டி- ஸ்டென்ட் சிகிச்சை அல்லது முழு அடைப்பு ஏற்பட்டிருந்தால் பை-பாஸ் அறுவைச் சிகிச்சை செய்வது வழக்கமாக உள்ளது. இருதய கரோனரி ரத்தக் குழாய்களின் அடைப்புக்கு ஏற்ப ஜப்பானில் மேற்கொள்ளப்படும் 3 வகையான தொழில்நுட்ப அடிப்படையிலான சிகிச்சை குறித்து விளக்க டாக்டர் தகாஹிடே சுசுகி சென்னை மியாட் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
இருதய ரத்தக் குழாய் அடைப்புக்கு அறுவைச் சிகிச்சையின்றி இருதய உள்ளீட்டு மருத்துவ சிகிச்சை ("இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி') குறித்து டாக்டர் தகாஹிடே சுசுகி, மியாட் மருத்துவமனையின் இதய மருத்துவ நிபுணர்கள் சரவணன் பழனியப்பன், கே.ஜெய்சங்கர், பிரதீப் ஜி.நாயர் ஆகியோர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:-
இருதய கரோனரி ரத்தக் குழாய்களில் முழு அடைப்பு அல்லது அடைப்பின் விகிதம் அதிகமாக இருந்தாலும்கூட அறுவைச் சிகிச்சையின் தேவையின்றி ஜப்பான் தொழில்நுட்ப அடிப்படையில் சிகிச்சை அளிக்க முடியும். மேலும் நோயாளியின் சிறுநீரகப் பிரச்னை உள்ளிட்ட பிற பாதிப்புகள் காரணமாக பை-பாஸ் அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள முடியாத சூழ்நிலையில், ஜப்பானில் மேற்கொள்ளப்படும் மூன்று வகையான தொழில்நுட்ப முறைகளில், கால் வழியே கதீட்டர் குழாயை நுழைத்து இருதய கரோனரி ரத்தக் குழாய் வரை கொண்டு சென்று அடைப்பை நீக்கி "ஸ்டென்ட்' (வலை போன்ற அமைப்பு) பொருத்தி மறுவாழ்வு அளிக்க முடியும்.
இத்தகைய தொழில்நுட்ப முறையில் சென்னை மியாட் மருத்துவமனையில் 47 வயது பெண் நோயாளி, 42 வயது ஆண் நோயாளி ஆகியோருக்கு இதய கரோனரி ரத்தக் குழாய் அடைப்பு நீக்க சிகிச்சை புதன்கிழமை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு "ஸ்டென்ட்' பொருத்தப்பட்டது என்று அவர்கள் தெரிவித்தனர்.