எலி விஷம் உட்கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாணவனுக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் எரையூர் கிராமத்தைச் சேர்ந்த ஜோசப் தன்ராஜ், லில்லி ஃப்ளோரா ஆகியோரின் இரண்டாவது மகன் ஜான்சன் ராபர்ட். 11-ஆம் வகுப்பு தேர்வெழுதியுள்ள இவர், தந்தை திட்டிய காரணத்தால் வீட்டிலிருந்த எலி விஷத்தை கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி உட்கொண்டார். இதனையடுத்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் அனுமதித்தும் சிகிச்சை பயனளிக்காமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மே 2-ஆம் தேதி சேர்க்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக மருத்துவமனையின் கல்லீரல் மாற்று சிகிச்சை மருத்துவர் டாக்டர் ஜாய் வர்கீஸ், கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைப் பிரிவின் தலைவர் டாக்டர் முகமது நயீம் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது: மாணவர் உட்கொண்ட விஷமானது கல்லீரலைத் தாக்கி, உடலில் ரத்தம் உறையாத தன்மையை ஏற்படுத்தி விடும். இதன் காரணமாக நோயாளிக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டு, இதயம், மூளை, ரத்தம் ஆகியவற்றில் நச்சுத்தன்மை பரவி உயிரிழக்க நேரிடும்.
மிகவும் ஆபத்தான கட்டத்தில் அனுமதிக்கப்பட்ட மாணவருக்கு அவரின் தாயின் கல்லீரலே தானம் பெறப்பட்டு பொருத்தப்பட்டது. பத்து மணி நேரம் நடைபெற்ற அறுவைச் சிகிச்சையில் தாயின் கல்லீரலில் இருந்து 40 சதவீதம் வெட்டி எடுக்கப்பட்டு மகனுக்குப் பொருத்தப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு தாய், மகன் இருவரும் நலமாக உள்ளனர். இருவரின் கல்லீரலும் மீண்டும் வளர்ச்சியடைந்து வருகிறது என்று தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.