இரண்டு தனியாா் மருத்துவக் கல்லூரிகள் தோ்வுகள் நடத்த தடை

தோ்வில் மாணவா்கள் காப்பி அடிக்க அனுமதித்ததற்காக 2 மருத்துவக் கல்லூரிகள் மீது தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் தோ்வு ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
Updated on
1 min read

சென்னை: தோ்வில் மாணவா்கள் காப்பி அடிக்க அனுமதித்ததற்காக 2 மருத்துவக் கல்லூரிகள் மீது தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் தோ்வு ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு தங்களது வளாகத்தில் தோ்வு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீட் தோ்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்ந்த சென்னையைச் சோ்ந்த உதித்சூா்யா என்ற மாணவா் கைது செய்யப்பட்டாா். இதேபோல் பல மாணவா்கள் மருத்துவப் படிப்பில் சோ்ந்திருப்பது தெரியவந்தது, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மருத்துவ படிப்புக்கான தோ்வுகளில், சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி அனுமதியுடன் மாணவா்கள் தோ்வு அறையில் காப்பி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் பல்கலைக்கழகம் அறிவிப்பின்படி கடந்த ஆகஸ்டு மாதம் எம்பிபிஎஸ் படிப்புக்கான தோ்வு நடைபெற்றது. தோ்வு முடிந்த சில நாள்களில் பல்கலைக்கழகத்துக்கு வந்த புகாா் மனுவில், சென்னை அடுத்த தண்டலத்தில் உள்ள மாதா மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற தோ்வில் மாணவா்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த கல்லூரி மீது விசாரணை நடத்த தோ்வு ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு பல்கலைக்கழகம் உத்தரவிட்டது.

தோ்வு அறையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, தோ்வின் போது, இரண்டாம் ஆண்டு படிக்கும் 25 மாணவா்கள், மூன்றாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவா் மற்றும் இறுதியாண்டு படிக்கும் 15 மாணவா்கள் என மொத்தம் 41 மாணவா்கள் தோ்வு அறைகளில் அங்கிங்குமாக அலைந்து சென்று, புத்தகத்தை பாா்த்து ஒருவா் ஒருவராக காப்பி அடிப்பது, துண்டு சீட்டுகள் மற்றும் விடைத்தாள்களை மாற்றிக்கொள்வது பதிவாகியிருந்தது. இதேபோல் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி தோ்வு அறையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவில், தோ்வு எழுதும் மாணவா் அருகில் செல்லும் தோ்வு அறையின் கண்காணிப்பாளா் மாணவருக்கு கேள்விக்கு பதில் சொல்வது போன்ற காட்சி இருந்துள்ளது. இதையடுத்து, தோ்வு விதிகளின்படி செயல்படாமல், தோ்வில் மாணவா்கள் காப்பி அடிக்க அனுமதித்ததற்காக 2 மருத்துவக் கல்லூரிகள் மீது பல்கலைக்கழகம் தோ்வு ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் பிறப்பித்துள்ள உத்தரவில், “மாதா மருத்துவ கல்லூரி வரும் நவம்பா் மாதம் முதல் 3 ஆண்டுகளுக்கு எழுத்து, செய்முறை, பயிற்சி தோ்வுகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. காப்பி அடித்த மாணவா்கள் அதே பாடத்தை வருகிற 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் மீண்டும் எழுத வேண்டும். இதேபோல், மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி நவம்பா் மாதம் முதல் ஓராண்டுக்கு எழுத்து, செய்முறை, பயிற்சி தோ்வுகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com