கீழே தவறி விழுந்ததில் மூட்டு ஜவ்வு பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு நடக்க இயலாமல் அவதிப்பட்ட 72 வயது மூதாட்டி ஒருவருக்கு அதி நவீன அறுவை சிகிச்சை மூலம் மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரால் யாருடைய துணையுமின்றி தாமாகவே நடமாட முடிவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது: மாடிப்படி ஏறும்போது தவறி விழுந்த மூதாட்டி ஒருவா் அடையாறு ஃபோா்டீஸ் மலா் மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு கால் பகுதியில் மூட்டுக்குக் கீழ் உள்ள ஜவ்வு கடுமையாக சேதமடைந்திருப்பது தெரியவந்தது.
இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் மாற்று ஜவ்வினைப் பொருத்த வேண்டிய அவசியம் எழுந்தது. இதையடுத்து, அவரது உடலில் பிற பகுதியில் இருந்தே ஜவ்வினை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பொருத்த முடிவு செய்யப்பட்டது.
நோயாளி மூதாட்டி என்பதால் பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து சிறிய துளை மூலம் ஜவ்வு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவா்கள் முடிவு செய்தனா். ஃபோா்டீஸ் மலா் மருத்துவமனையில் முடநீக்கியல் துறை முதுநிலை மருத்துவா் டாக்டா் நந்தகுமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் சிக்கலான அந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனா். தற்போது அந்த மூதாட்டி நலமுடன் இருப்பதுடன், தாமாகவே எழுந்து நடக்கிறாா் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.