உயர் அழுத்த மின்கம்பியில் பழுது: மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

சென்னை சைதாப்பேட்டை-சின்னமலை இடையே உயர் அழுத்த மின்கம்பியில் ஏற்பட்ட பழுதால், மெட்ரோ ரயில் சேவை திங்கள்கிழமை நான்கரை மணி நேரம் பாதிக்கப்பட்டது. 
உயர் அழுத்த மின்கம்பியில் பழுது: மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு
Updated on
1 min read


சென்னை சைதாப்பேட்டை-சின்னமலை இடையே உயர் அழுத்த மின்கம்பியில் ஏற்பட்ட பழுதால், மெட்ரோ ரயில் சேவை திங்கள்கிழமை நான்கரை மணி நேரம் பாதிக்கப்பட்டது. 
இதனால், மெட்ரோ ரயிலில்  இலவச பயணம் மேற்கொள்ள வந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர். இருப்பினும்,  பகல் ஒரு மணிக்குப் பிறகு, இந்த வழித்தடத்தில் ரயில்கள் வழக்கம்போல இயங்கின. 
வண்ணாரப்பேட்டை- ஏஜி. டி.எம்.எஸ்., இடையே புதிய பாதையில் மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. விமானநிலையம்-வண்ணாரப்பேட்டை வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல்-பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை (பிப்.10) முதல் முழுமையாக இயக்கப்படுகிறது. 
காலையிலேயே குவிந்த மக்கள்: இரண்டு வழித் தடங்களிலும் உள்ளஅனைத்து நிலையங்களிலும் பொதுமக்கள் திங்கள்கிழமை (பிப்.11)  இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து, மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்காக மெட்ரோ ரயில் நிலையங்களில் பொதுமக்கள் திங்கள்கிழமை காலை குவிந்தனர். 
இந்த நிலையில், சைதாப்பேட்டை-சின்னமலை இடையே திங்கள்கிழமை காலை 8.30 மணிக்கு உயர் அழுத்த மின்கம்பியில் திடீரென  பழுது ஏற்பட்டது. இதையடுத்து, சின்னமலை ரயில் நிலையத்தின் நடைமேடையில்  ரயில்கள் இயக்கப்படவில்லை. குறிப்பாக, டி.எம்.எஸ் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவில்லை.
 இதைத் தொடர்ந்து,  உயர்அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் மெட்ரோ ரயில் நிர்வாக பொறியாளர்கள், ஊழியர்கள் ஈடுபட்டனர். உயர் அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட பழுது காரணமாக, ஒரு வழி பாதையில் மட்டும் மெட்ரோ  ரயில் இயக்கப்பட்டது. சென்ட்ரலில் இருந்து டி.எம்.எஸ். நிலையத்துக்கு வந்த  ரயில்கள்  மீண்டும் சென்ட்ரலுக்குத் திருப்பி விடப்பட்டன. இதுபோன்று, விமானநிலையத்தில் இருந்து சின்னமலைக்கு வந்த  மெட்ரோ ரயில் மீண்டும் விமான நிலையத்துக்கு திரும்பிச் சென்றது. இதனால், மெட்ரோ ரயிலில் இலவச பயணம் மேற்கொள்ள வந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். 
ஆனால் மற்ற வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு ஏற்படவில்லை. வண்ணாரப்பேட்டை-ஏஜி டி.எம்.எஸ்., சென்ட்ரல்-பரங்கிமலை, சென்ட்ரல்-விமானநிலையம் ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல இயங்கின.
இதற்கிடையில், சைதாப்பேட்டை- சின்னமலை இடையே உயர்அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட பழுது பகல் 1 மணிக்கு சரி செய்யப்பட்டது. இதையடுத்து, டி.எம்.எஸ் - விமான நிலையம், வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் என அனைத்து வழித் தடங்களிலும் மெட்ரோ ரயில்கள் இயங்கத் தொடங்கின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com