

புதிய தொழில்நுட்பம் மருத்துவர்களின் திறமையை மேம்படுத்துகிறது என்று கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கூறினார்.
வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் ரோபோட்டிக் உதவியுடன் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை மையம் தொடக்கவிழா புதன்கிழமை நடைபெற்றது.
சிம்ஸ் மருத்துவமனைத் தலைவர் ரவி பச்சமுத்து தலைமையில் கிரிக்கெட் வீரர் கபில்தேவ், நடிகை ஜோதிகா தொடங்கி வைத்தனர். விழாவில் கபில்தேவ் பேசியது
கிரிக்கெட் விளையாட்டில் காயமேற்பட்டு எனக்கு 4 முறை மூட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 40 ஆண்டுகளுக்கு முன் இது போன்ற நவீன அறுவை சிகிச்சை தொழில்நுட்ப உதவியுடன் அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தால் நான் இன்னும் 6 ஆண்டுகள் கூடுதலாக கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பைப் பெற்று இருப்பேன். புதிய தொழில்நுட்பத்தைச் சிறப்பாகக் கையாளும் திறன் பெற்ற மருத்துவர்களால் நோயாளிகள் பெருமளவில் பயன் பெறுவர் என்றார்.
நடிகை ஜோதிகா பேசுகையில், மூட்டுவலியால் அவதிப்பட்ட என்தாயாருக்கு சில வருடங்களுக்கு முன் மும்பையில் ஒரு மருத்துவமனையில் மேற்கொண்ட அறுவை சிகிச்சை உரிய பலனை அளிக்கவில்லை. அதன்பின்னர் வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் மறுபடியும் மேற்கொண்ட அறுவை சிகிச்சை நல்ல பலனை அளித்துள்ளது என்றார்.
எலும்பு முறிவுத்துறை இணை இயக்குநர் போஸ், ரோபாட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளியை அதே நாளில் நடக்க வைக்க முடியும்.அதிக அளவில் ரத்தம் வெளியேற வாய்ப்பில்லை. விரைவில் குணமடைந்து வீடு திரும்ப முடியும். மூட்டுமாற்று அறுவை சிகிச்சைக்கு வயது ஒரு பிரச்னை அல்ல என்றார்.
சிம்ஸ் மருத்துவமனை முதுநிலை ஆலோசகர் பி.எஸ்.அசோக்குமார், துணைத் தலைவர்கள் ராஜூ சிவசாமி, பி.சூரியநாராயணன், இயக்குநர் விஜய் சி.போஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.