பிரசன்னா ராமசாமி, நாடகக் கலைஞர்:
எனக்கு இந்த புத்தகங்கள்தாம் பிடிக்கும் என்று சொல்வதை விட, இந்த எழுத்தாளரின் புத்தகங்கள் பிடிக்கும் என்று சொல்வதே சரி எனப்படுகிறது.
ஏனெனில் ஒரே எழுத்தாளரின் பல புத்தகங்களை நான் விரும்பிப் படிப்பேன். அதில் எந்தப் புத்தகத்தைச் சொல்வது, எந்தப் புத்தகத்தை விடுவது?
எனக்கு அசோகமித்திரன், இமயம், ஆதவன்தீட்சண்யா, ந.முத்துசாமி, தி.ஜானகிராமன், மெளனி, கரன் கார்க்கி ஆகிய எழுத்தாளர்கள் எழுதிய பல புத்தகங்களைப் பிடிக்கும்.
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இமயம் எழுதிய புத்தகங்கள் எனக்குப் பிடிக்கும். அவர் புதிதாக எழுதியிருக்கும் நன்மாறன் கோட்டைக் கதையை இப்போதுதான் வாங்கியிருக்கிறேன்.
ந.முத்துசாமியின் சிறுகதைத் தொகுப்பான மேற்கத்திக் கொம்பு மாடுகள் எனக்குப் பிடித்த புத்தகங்களில் ஒன்று. கரன் கார்க்கியின் கறுப்பர் நகரம் எனக்குப் பிடித்தமான ஒன்று.
ஆதவன் தீட்சண்யாவின் மீசை என்பது வெறும் மயிர் என்ற புத்தகம் குறிப்பிடத்தக்கது. எனக்குப் பிடித்த புத்தகங்களில் அதுவும் ஒன்று என்றார்.