சென்ட்ரலில் சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர்: சென்னை மெட்ரோ நிறுவனம் ஏற்பாடு
By DIN | Published On : 05th May 2019 02:28 AM | Last Updated : 05th May 2019 02:28 AM | அ+அ அ- |

கோடை காலத்தில் மக்களின் குடிநீர் தாகத்தைத் தீர்க்கும் வகையில், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவுவாயில் அருகே ரூ. 5 லட்சம் மதிப்பில் இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை மெட்ரோ ரயில் நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது. இதுபோல, மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் அமைத்து கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதி அருகே மக்களின் பயன்பாட்டுக்காக ரூ.5 லட்சம் மதிப்பில் 500 லிட்டர் கொள்ளளவில் இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புறநகர் பூங்கா ரயில் நிலையம், டாக்டர் எம்.ஜி ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் சுரங்கப்பாதை, சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் மற்றும் முதன்மை சாலை பேருந்து நிலையம் ஆகிய இடங்கள் இணையுமிடத்தில், இந்த வசதி அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது கத்திரி வெயில் வறுத்தெடுத்து வரும் நிலையில், இந்த வசதி மக்களுக்கு குடிநீர் தாகத்தை தீர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், "எதிர்காலத்தில் மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இதுபோன்ற சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றார் அவர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...