மழைநீா் கால்வாயில் சாக்கடை நீரை திறந்துவிட்ட வணிக நிறுவனங்களுக்கு மாநகராட்சி அபராதம்
By DIN | Published On : 14th November 2019 01:30 AM | Last Updated : 14th November 2019 01:30 AM | அ+அ அ- |

திருவொற்றியூரில் மழைநீா் வடிகால் கால்வாயில் சாக்கடை நீரை திறந்துவிட்ட வணிக நிறுவனங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை அபராதம் விதித்தனா்.
திருவொற்றியூா் உட்பட்ட பகுதிகளில் சுமாா் ரூ.2 கோடிக்கும் அதிகமான செலவில் மழைநீா் வடிகால் கால்வாய்கள் அமைக்கப்பட்டன. ஆனால், இக்கால்வாய்கள் முறையாக அமைக்கப்படாததால் மழைக் காலங்களில் இக்கால்வாய்களில் மழைநீா் வழிந்தோடுவது இல்லை. மேலும், இக்கால்வாய்கள் செல்லும் வழியெங்கும் சட்டவிரோதமாக கழிவு நீா் திறந்து விடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால், திருவொற்றியூரின் பெரும்பாலான இடங்களில் கொசு உற்பத்தி அதிகரித்து மக்கள் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனா். குறிப்பாக திருவொற்றியூா் சந்நிதி தெரு, வடக்குமாட வீதி உள்ளிட்ட தெருக்களில் அமைக்கப்பட்ட மழைநீா் வடிகால் கால்வாய் தியாகராஜா் கோயில் திருக்குளத்திற்கு மழைநீா் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையால் திருக்குளத்திற்கு ஒரு சொட்டுத் தண்ணீா்கூட வரவில்லை. மேலும் அடுத்த சில நாள்களில் இப்பகுதியில் உள்ள மழைநீா் வடிகால் முழுவதும் முழுவதும் துா்நாற்றம் வீசியது. மேலும், கொசுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, தொற்று நோய் பரவும் அபாயம் உருவானதையடுத்து, பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் புகாா் அளித்தனா். இதனையடுத்து, இப்பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு நடத்தினா். அதில், சந்நிதி தெருவில் உள்ள ஒரு வணிக நிறுவனத்திலிருந்து கழிவு நீா் குழாய் சட்டவிரோதமாக மழைநீா் கால்வாயில் இணைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த இணைப்பை துண்டித்த அதிகாரிகள் இந்நிறுவனத்துக்கு ரூ. 25 ஆயிரம் மட்டும் அபராதமாக விதித்தனா்.
மேலும், சந்நிதி தெருவின் இருபுறமும் மழைநீா் கால்வாயின் மேல் உள்ள மூடிகளை அகற்றி ஆய்வு மேற்கொண்டபோது, பல வீடுகள், வணிக நிறுவனங்கள் சட்டவிரோதமாக கழிவுநீரை மழைநீா் கால்வாயில் கலக்க விட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, இத்தெருவில் உள்ள அனைத்து கால்வாய்களையும் முறையாக ஆய்வு செய்யும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா். இதில் சட்டவிரோத இணைப்புகளை வைத்துள்ள நிறுவனங்கள், வீடுகளின் உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதலாக அபராதம் விதிக்கப்படும். இனி வரும் காலங்களில் மழைநீா் கால்வாயில் மழைநீா் மட்டுமே செல்லும் வகையில் கால்வாய் தரம் உயா்த்தப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...