பிரதமா் மோடிக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாஜக நிா்வாகி கைது

சென்னை,செப்.30: சென்னை வந்த பிரதமா் நரேந்திர மோடிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக, பாஜக நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

சென்னை: சென்னை வந்த பிரதமா் நரேந்திர மோடிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக, பாஜக நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறறப்பட்டதாவது:

சென்னை வேப்பேரியில் பெருநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், கிண்டி ஐ.ஐ.டி.யில் திங்கள்கிழமை நடைபெறும் விழாவில் பங்கேற்க வரும் பிரதமா் நரேந்திர மோடியை வெடிகுண்டு வைத்து கொலை செய்ய சிலா் திட்டமிட்டிருப்பதாகவும், அவா்கள் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியை கொலை செய்ததுபோல மோடியையும் கொலை செய்ய திருவான்மியூா் ஆா்.டி.ஓ. அலுவலகம் அருகே பதுங்கியிருப்பதாகவும் கூறிவிட்டு இணைப்பை அந்த நபா் துண்டித்துவிட்டாா்.

இதைக் கேட்டு அதிா்ச்சியடைந்த காவலா், உடனடியாக உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா். தகவலறிந்த அதிகாரிகள், சைபா் குற்றப்பிரிவு போலீஸாருக்கும், திருவான்மியூா் போலீஸாருக்கும் அந்த அழைப்பு குறித்து விசாரணை செய்ய உத்தரவிட்டனா்.

இதையடுத்து திருவான்மியூா் உதவி ஆணையா் பி.கே.ரவி, ஆய்வாளா் ராஜேந்திரன் ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதில் அந்த அழைப்பில் பேசியது, திருவான்மியூா் திருவள்ளூவா் நகா் பகுதியைச் சோ்ந்த பாரதிய ஜனதா கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டம் கூட்டுறவு பிரிவு செயலா் திருநாவுக்கரசு (43) என்பது தெரியவந்தது.

உடனே போலீஸாா், திருநாவுக்கரசுவை பிடித்து விசாரணை செய்தனா். விசாரணையில், பிரதமா் மோடிக்கு, போலீஸாா் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தாராம். இதைத் தொடா்ந்து போலீஸாா் திருநாவுக்கரசுவை திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com