ஒரே நேரத்தில் 9,365 சரக்குப் பெட்டகங்களை ஏற்றிச் செல்லும் திறன்படைத்த மிகப்பெரிய கப்பலான எம்.வி. சிஎம்ஏ சிஜிஎம் ரோன் கப்பல் முதல் முறையாக சென்னை துறைமுகத்துக்கு வந்தது.
சென்னைத் துறைமுகத்தில் உள்ள டி.பி.வேர்ல்டு என்ற முதலாவது முனையத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை 9,365 பெட்டகங்களை ஏற்றிச் செல்லும் திறன்படைத்த மிகப்பெரிய கப்பலான எம்.வி. சிஎம்ஏ சிஜிஎம் ரோன் வந்தது. கப்பல் போக்குவரத்தில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சிஎம்ஏ சிஜிஎம் இப்பெரிய கப்பலை இயக்கி வருகிறது. இந்தக் கப்பலிலிருந்து 2, 434 சரக்குப் பெட்டகங்கள் இறக்கப்பட்டு 1, 365 பெட்டகங்கள் ஏற்றப்பட்டன. சென்னைத் துறைமுகத்திற்கு வந்த இக்கப்பலுக்கு துறைமுக நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் திங்கள்கிழமை இரவு இக்கப்பல் புறப்பட்டுச் சென்றது.
கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்படும்: இப்புதிய சாதனை குறித்து துறைமுகத் தலைவர் பி.ரவீந்திரன் கூறியது,
கப்பல் போக்குவரத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மாற்றங்களின் அடிப்படையில் பெரிய கப்பல்கள் லாபகரமாக இயங்க முடியும் என்ற நிலை உள்ளது. எனவே, அதற்கேற்ற வகையில் சென்னைத் துறைமுகத்தில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பெரிய கப்பல்கள் வந்து செல்ல ஆழமான கடல் பகுதி அவசியமானது. எனவே இதற்கேற்ப கூடுதல் ஆழத்தை ஏற்படுத்தும் வகையில் தூர்வாரப்பட்டுள்ளது. மேலும், ஆழ்கடல் பகுதியிலிருந்து துறைமுகத்திற்கு வரும் கடல்வழி கால்வாயும் தேவையான அளவு தூர்வாரப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதைவிட பெரிய கப்பலைகளையும் கையாளும் வகையில் தொடர்ந்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். மேலும், சரக்குப் பெட்டக முனையங்களும் திறன்வாய்ந்த கிரேன் உள்ளிட்ட நவீன வசதிகளை ஏற்படுத்தி வருகின்றன. இவ்வாறான பெரிய கப்பல்கள் வருகை மூலம் இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதிக்கான பயண நேரம் குறைந்து கட்டணங்களும் கணிசமாக குறையும் என்றார் ரவீந்திரன்.