சென்னை கொடுங்கையூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 97-ஆவது தெருவைச் சேர்ந்தவர் கோ.விமலா (68). இவர் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பிரேதப் பரிசோதனையில் விமலா கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த க.சங்கர் (34) என்பவர் தனியாக இருந்த விமலாவிடம் அத்துமீறி நடந்திருப்பதும், அப்போது ஏற்பட்ட தகராறில் விமலாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் சங்கரை சனிக்கிழமை கைது செய்தனர்.