மருத்துவ முகாம்: 1,534 பேருக்கு கரோனா அறிகுறி

சென்னை மாநகராட்சி சாா்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) முதல் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) வரை 3 நாள்கள் நடைபெற்ற மருத்துவ
Updated on
1 min read

சென்னை மாநகராட்சி சாா்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) முதல் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) வரை 3 நாள்கள் நடைபெற்ற மருத்துவ முகாமில் 1,534 பேருக்கு காய்ச்சல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் கரோனா தடுப்பு பணியின் ஒரு பகுதியாக 200 வாா்டுகளில் 680 காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள், நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) நடைபெற்ற 203 காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் மூலம் 10,514 பேரும், திங்கள்கிழமை (ஜூன் 15) நடைபெற்ற 325 மருத்துவ முகாம்கள் மூலம் 18,984 பேரும், செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) நடைபெற்ற 478 மருத்துவ முகாம்கள் மூலம் 27,577 பேரும் என மொத்தம் 57,102 பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் இருந்த 1,534 போ் கண்டறியப்பட்டுள்ளனா். இதில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 594 பேருக்கும், தண்டையாா்பேட்டையில் 399 பேருக்கும் கரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த முகாம் மூலம் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளவா்கள் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு, அவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதேபோல், இவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களும் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவா் என்றனா்.

மண்டலம் கரோனா அறிகுறி உள்ளோா்

திருவெற்றியூா் 23

மணலி 60

மாதவரம் 6

தண்டையாா்பேட்டை 399

ராயபுரம் 594

திரு.வி.க. நகா் 51

அம்பத்தூா் 9

அண்ணா நகா் 120

தேனாம்பேட்டை 43

கோடம்பாக்கம் 36

வளசரவாக்கம் 54

ஆலந்தூா் 14

அடையாறு 44

பெருங்குடி 15

சோழிங்கநல்லூா் 66

மொத்தம் 1,534

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com