ஊரடங்கு தளர்வு: காற்றில் பறக்கவிடப்பட்ட கட்டுப்பாடுகள்

சென்னையில் கரோனா தொற்று  தீவிரமாகப் பரவி வரும் நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பகுதிகளில் மக்கள் எவ்வித கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்காததால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை கோடம்பாக்கம் பவர் அவுஸ் அருகே சமூக இடைவெளியின்றி  ரேஷன் பொருள்களை வாங்க திரண்ட மக்கள்.
சென்னை கோடம்பாக்கம் பவர் அவுஸ் அருகே சமூக இடைவெளியின்றி  ரேஷன் பொருள்களை வாங்க திரண்ட மக்கள்.
Updated on
1 min read


சென்னை-: சென்னையில் கரோனா தொற்று  தீவிரமாகப் பரவி வரும் நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பகுதிகளில் மக்கள் எவ்வித கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்காததால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழக தலைநகர் சென்னையில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  ஞாயிற்றுக்கிழமை வரை 3,550 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 1,724 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இது மொத்த எண்ணிக்கையை ஒப்பிடும்போது பாதி அளவாகும்.
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் சுமார் 250-க்கும் மேற்பட்ட தெருக்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசிக்கும் 5 கி.மீ. சுற்றளவு பகுதி நோய்க் கட்டுப்பாடு பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் கரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வரும் நிலையில், மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டதால், திங்கள்கிழமை முதல் சில தளர்வுகளை அரசு அறிவித்தது. 

இதன்படி, சென்னையில் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் கட்டுமானப் பணி,  அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள், ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமானப் பொருள்கள் உள்ளிட்ட கடைகளுக்கு  திங்கள்கிழமை (மே 4)  முதல் நேரக் கட்டுப்பாடுடன் அனுமதி அளிக்கப்பட்டது.

கடைப்பிடிக்கப்படாத கட்டுப்பாடுகள்: சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் திருவிக நகர், ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணா நகர் மற்றும் தண்டையார்பேட்டை ஆகிய 6 மண்டலங்களில்  பெரும்பாலான பகுதிகள் நோய்க் கட்டுப்பாடு பகுதிக்குள் வருவதால் அங்கு குறைந்த அளவிலான கடைகளே திறந்திருந்தன. இருப்பினும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் திருவொற்றியூர், மணலி ஆகிய பகுதிகளுக்குச் சென்று பொருள்கள் வாங்கி வந்தனர்.

அதே வேளையில் பாதிப்பு குறைந்து காணப்படும் அடையாறு, ஆலந்தூர், சோழிங்கநல்லூர், பெருங்குடி, அம்பத்தூர், வளசரவாக்கம் மண்டலங்களில் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தின. அதிக அளவிலான மக்கள் பொருள்களை வாங்க கடைகளில் திரண்டனர். இதில், பெரும்பாலான கடைகளில் தனிநபர் இடைவெளி உள்ளிட்ட எவ்வித சுகாதார முறைகளையும் கடைப்பிடிக்கவில்லை.  

இனிவரும் நாள்களில் இதே நிலைமை தொடர்ந்தால், கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் மே 3 வரை கடைப்பிடிக்கப்பட்ட ஊரடங்கு பயனில்லாமல் போகும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com