பிசிஆர் பரிசோதனைகளை அதிகளவில் மேற்கொள்ளாதது ஏன்? -உயர்நீதிமன்றம்

கரோனா நோய்த் தொற்றைக் கண்டறியும் பிசிஆர் பரிசோதனை அதிக எண்ணிக்கையில் மேற்கொள்ளாதது ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
Updated on
1 min read


சென்னை: கரோனா நோய்த் தொற்றைக் கண்டறியும் பிசிஆர் பரிசோதனை அதிக எண்ணிக்கையில் மேற்கொள்ளாதது ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த வி.பொன்ராஜ் தாக்கல் செய்த மனுவில், கரோனா பரவலைத் தடுக்க தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மட்டும் போதுமானது அல்ல. நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பது அவசியமாகும். தற்போது இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 452 என்ற அடிப்படையில் தான் பரிசோதனை செய்யப்படுகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில்  நாள்தோறும் 40 ஆயிரத்துக்கும் குறைவான நபர்களுக்கு மட்டுமே இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.   தமிழகத்தைப் பொருத்தவரை 47 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் செய்ய வசதிகள் இருந்தும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே இந்த சோதனை செய்யப்படுகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ள 41 ஆய்வகங்கள் தவிர்த்து, தமிழகத்தில் அறிவியல் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் 126 பிசிஆர் ஆய்வகங்கள் உள்ளன. இவற்றை முழுமையாக பயன்படுத்தினால் ஒரு மாதத்தில் 14 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியும். நாடு முழுவதும், தமிழகத்தில் பிசிஆர் ஆய்வகங்கள் எத்தனை உள்ளன, இந்த ஆய்வகங்களில் கரோனா நோய்த் தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் வசதிகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். மத்திய சுகாதார ஆராய்ச்சி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.1,100 கோடியில் கொண்டு வரப்பட்ட புதிய கண்டுபிடிப்புகள் எத்தனை, என்பது குறித்தும் பதிலளிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 
இந்த வழக்கை நீதிபதிகள் வினீத்கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். விசாரணையில் நீதிபதிகள், கரோனா நோய்த் தொற்றைக் கண்டறியும், பிசிஆர் பரிசோதனைகளை அதிக எண்ணிக்கையில் மேற்கொள்ளாதது ஏன் என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com