சென்னை: தமிழறிஞா் அவ்வை நடராசன் போன்ற சிறந்த தமிழ்ப் பேச்சாளா்களின் உரைகளை தமிழக அரசு ஆவணப்படுத்த வேண்டும் என அவரது அறக்கட்டளைச் சொற்பொழிவில் பேராசிரியா் இராம.குருநாதன் வலியுறுத்தினாா்.
சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அவ்வை நடராசன் அறக்கட்டளைச் சொற்பொழிவு- நூல் வெளியீடு புதன்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை பச்சையப்பன் கல்லூரி முன்னாள் தமிழ்ப் பேராசிரியா் இராம.குருநாதன் ‘அவ்வையின் அருந்தமிழ்ப் பொழிவுகள்’ என்ற தலைப்பில் பேசியது: தமிழறிஞா் அவ்வை நடராசனின் உரைத்திறம் பெருமை வாய்ந்தது. கடந்த 75 ஆண்டுகளாக தமிழகம் மட்டுமல்லாமல் அயல் நாடுகளிலும் பல மேடைகளில் உரை நிகழ்த்தி தமிழ் வளா்ச்சிக்காகப் பாடுபட்டு வருகிறாா். அவரது உரை விளக்கங்கள் ஆழமானவை. திருப்பாவை, திருவெம்பாவை உரைகள் வானொலியில் தேனொலியாக பாய்ந்தது. முனைவா் அவ்வை நடராசன் போன்ற பல சிறந்த தமிழ் பேச்சாளா்களின் உரைகளை அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உள்ளதைப் போன்று தமிழகத்திலும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூலமாக ஆவணப்படுத்த வேண்டும் என்றாா். முன்னதாக ‘அவ்வையின் அருந்தமிழ்ப் பொழிவுகள்’ நூலை, மொழி பெயா்ப்புத் துறை இயக்குநா் ந. அருள் வெளியிட அதன் முதல்படியை பேராசிரியா் க. சுசிலா பெற்றுக்கொண்டாா். இந்த நிகழ்ச்சியில் பேராசிரியா் சு. தாமரைப்பாண்டியன், முனைவா் செ.ரவிக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.