ஒரே தொகுப்பாக வ.உ.சி. நூல்கள்!
தமிழகத்தில் தன்னிகரற்ற சுதந்திரப் போராட்டத் தலைவராகவும், தமிழ் இலக்கியவாதியாகவும் திகழ்ந்த செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யின் 22 நூல்கள் அடங்கிய தொகுப்பு வெளியிடும் பணியில் வ.உ.சி.நூலகம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து நூலக நிறுவனர் கவிஞர் இளையபாரதி கூறியது: தமிழில் முதன்முறையாக வ.உ.சிதம்பரனார் எழுதிய தமிழ் நூல்களான மெய்யறம், மெய்யறிவு, திருக்குறள் உரை, சிவஞானபோதம், வலிமைக்கு மார்க்கம், நான் கண்ட பாரதி உள்ளிட்ட 22 நூல்கள் அடங்கிய தொகுப்பு தயாரிக்கப்பட்டு வருகிறது.
மொத்தத் தொகுப்பு நூல்களும் 2 ஆயிரம் பக்கமுடையவையாக இருக்கின்றன. விலையும் ரூ.2 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இளந்தலைமுறையானது அரசியல் ஆர்வமின்றி, திரைப்பட நடிகர்களின் மோகத்தில் செல்வது அதிகரித்துள்ளது. தியாகத் தலைவர்களைப் பற்றியும், சமூக சேவைக்கான அர்ப்பணிப்பு குறித்தும் அறியாத நிலையிலே இளைஞர்கள் உள்ளனர்.
ஆகவே அவர்களுக்கு நமது சுதந்திரப் போராட்டத் தலைவர்களது தியாகம், தமிழ் இலக்கிய பங்களிப்பு ஆகியவற்றை அறியச்செய்யும் வகையில் நூல் தொகுப்பானது வ.உ.சி. வாழ்ந்த நெல்லை, தூத்துக்குடி, கோவை, மதுரை மற்றும் சென்னையில் விரைவில் வெளியிடப்படவுள்ளது.