மதுரையில் கடந்த 1960-ஆம் ஆண்டு செல்லப்பன் என்பவரால் தொடங்கப்பட்டது மீனாட்சி புத்தக நிலையம். பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனின் "வாழ்க்கை அழைக்கிறது' என்ற முதல் கதை நூலை மீனாட்சி புத்தக நிலையமே வெளியிட்டது.
அதையடுத்து அவரது கதைகள் அனைத்தும் இந்தப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டன. இதுவரை சுமார் 300-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்களை வெளியிட்ட நிலையில், ஜெயகாந்தனின் நாவல்கள், சிறுகதைகள், பிற வகைகள் என அவரது படைப்புகளில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்களை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயகாந்தனுக்கு அடுத்ததாக தமிழ் இலக்கிய நூல்களை அதிகமாக மீனாட்சி புத்தக நிலையத்தார் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி மறைந்த பேராசிரியர் தமிழண்ணலின் ஆய்வியல் அறிமுகம் தொடங்கி, தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள், வாழ்க்கை வெற்றிக்கு வள்ளுவம், யாப்பெருங்கலக்காரிகை, பரிசில் வாழ்க்கை என 39 நூல்களையும் வெளியிட்டுள்ளனர்.
புதுமைப்பித்தன், கல்கி, கு.ப.ரா. அண்ணா, ந.பிச்சமூர்த்தி என தமிழ் ஆளுமைகளின் முத்திரைக் கதைத் தொகுப்புகளையும் இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மேலாண்மை பொன்னுச்சாமியின் நாவல், சிறுகதைகள் மற்றும் பிற எழுத்தாளர் வரிசையில் தமிழ் பேராசிரியர்களது இலக்கிய நூல்களையும், கட்டுரைத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளனர்.