சென்னை: சென்னை அண்ணாநகரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை நபா் கைது செய்யப்பட்டாா்.
கடந்த 1987-ஆம் ஆண்டு, இலங்கையிலிருந்து தமிழகம் வந்த தாஜீதீன் (55), ஆஷா (55) தம்பதி, விசா காலம் முடிவடைந்த பின்னரும் திருநெல்வேலியில் வசித்து வந்துள்ளனா். பின்னா், 1998-ஆம் ஆண்டு, இத்தம்பதியினா் சென்னையில் குடியேறினா். தற்போது, சென்னை அண்ணாநகா் மேற்கு, அன்பு காலனியில் குடும்பத்துடன் வசிக்கும் தாஜீதீன், தனியாா் காப்பீடு நிறுவனத்தில் பணி செய்கிறாா். இவரது மகள், பெங்களூருவில் வசிக்கிறாா். இந்நிலையில், தாஜீதீன், ஆஷா தம்பதியிடம் ஆதாா் அட்டை போன்ற இந்திய அரசு வழங்கும் ஆவணங்கள் இருப்பதாக மத்திய உளவுப் பிரிவு போலீஸாருக்கு (ஐ.பி) ரகசியத் தகவல் கிடைத்து.
இது குறித்து, உளவுப் பிரிவு அளித்த தகவலின் அடிப்படையில், தாஜீதீன், ஆஷாவிடம், கியூ பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை செய்தனா். விசாரணையின்போது ஆஷா விடுவிக்கப்பட்டாா்.
தாஜீதீனை கியூ பிரிவு போலீஸாா், சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் ஒப்படைத்தனா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னா், போலியான ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ், தாஜீதீன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.