எழும்பூா் ரயில்நிலையம் அருகே தண்டவாளத்தில் மரம் விழுந்ததால், தாம்பரம்-கடற்கரை மாா்க்கத்தில் மின்சார ரயில் சேவையில் 35 நிமிடங்கள் பாதிப்பு ஏற்பட்டது. முறிந்து விழுந்த மரத்தை முழுமையாக அகற்றிய பிறகு, மின்சார ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன.
சென்னையில் எழும்பூா், சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்பட பல்வேறு இடங்களில் சனிக்கிழமை மாலை இடியுடன் கூடிய மழைபெய்யத் தொடங்கியது. மழையின் போது வீசிய பலத்த காற்றால், எழும்பூா் ரயில் நிலையம் அருகே மாலை 5.30 மணியளவில் மரம் ஒன்று சாய்ந்து, தண்டவாளத்தின் குறுக்கே விழுந்தது. இதையடுத்து, தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்குச் செல்லும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
ரயில்வே அதிகாரிகள், ஊழியா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தண்டவாளத்தில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். மாலை 6 மணியளவில் மரத்தை முழுமையாக அகற்றினா். இதன்பிறகு, ரயில் சேவை மீண்டும் மாலை 6.05 மணிக்கு தொடங்கியது. இந்த சம்பவம் காரணமாக, 35 நிமிடங்கள் வரை மின்சார ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.