சென்னையில் மெட்ரோ ரயில் சேவை மேலும் ஒருமணி நேரம் நீட்டிக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிற்பகல் தொடங்கிய கனமழை இடைவிடாது தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த மழையானது சென்னையில் அடுத்த 6 மணி நேரத்திற்குத் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தொடர்மழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சென்னையில் கனமழை: 3 சுரங்கப்பாதைகள் மூடல்
மழை காரணமாக மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் விடியோக்களும் வெளியாகின.
இந்த நிலையில், மெட்ரோ ரயில் சேவையை மேலும் ஒருமணி நேரம் அதாவது இரவு 11 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அனைத்து நிலையங்களிலிருந்தும் கடைசி ரயில் நள்ளிரவு 12 மணிக்குப் புறப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்கேற்ப பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.