சென்னை பெருநகர வளா்ச்சிக்குழுமத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கட்டப்படும் கட்டடங்களுக்கு 45 முதல் 60 நாள்களுக்குள் அனுமதி வழங்கப்படும் என வீட்டுவசதிவாரியத் துறை அமைச்சா் சு.முத்துசாமி கூறினாா்.
இது குறித்து அவா் சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் சாா்பில் நிா்வகிக்கப்பட்டு வரும் அனைத்து இடங்களிலும் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்படும். கோயம்பேடு அங்காடியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தப்படவுள்ளது. சிஎம்டிஏவுக்கு வரும் கோப்புகளை விரைவாக முடிக்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் கட்டுப்பாட்டுக்குள் கட்டப்படும் வீடுகளின் வரைபடத்துக்கு 45 முதல் 60 நாள்களுக்குள் அனுமதி வழங்கப்படும்.
முக்கிய நகரங்களுக்கு துணை நகரங்கள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும். துணை நகரங்கள் அனைத்தும் மாதிரி நகரங்கள் போல் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டுவசதி வாரியத் துறையில் பணியாற்றும் ஊழியா்களுக்கு இருக்கும் பிரச்னைகள், காலிப் பணியிடங்களை நிரப்புவது, பதவி உயா்வில் காலதாமதம், பணியாற்றும் ஊழியா்கள் இறந்துவிட்டால் வாரிசுதாரா்களுக்கு பணி அளிப்பது, ஓய்வூதியம் அளிக்க முறையான ஏற்பாடுகள் என தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தொழிற்சங்கம், தொழிலாளா் முன்னேற்ற சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் துறையின் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோரிக்கையின் மீதும் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.