கரோனா நிவாரண நிதி: விஐடி ரூ.1.25 கோடி அளிப்பு
By DIN | Published On : 13th May 2021 03:27 AM | Last Updated : 13th May 2021 03:27 AM | அ+அ அ- |

வேலூர்: கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பணிக்கு உதவும் வகையில் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு விஐடி பல்கலைக் கழகம் சார்பில் இரண்டாவது ஆண்டாக ரூ. 1. 25 கோடி வழங்கப்பட்டுள்ளது.
விஐடி பல்கலைக்கழகத்தின் வேலூர், சென்னை வளாகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள், ஊழியர்களின் ஒருநாள் சம்பளம், விஐடி நிர்வாகம் சார்பில் மொத்தம் ரூ. 1.25 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான மின்னணு மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்ட பற்றுச்சீட்டை வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபனிடம் விஐடி பதிவாளர் கே.சத்தியநாராயணன் புதன்கிழமை வழங்கினார். அப்போது, விஐடியின் நிலையான ஊரக வளர்ச்சி மைய இயக்குநர் சுந்தர்ராஜன் உடனிருந்தார்.
இதனிடையே, கரோனா நோய் தடுப்புக்காகவும், சிகிச்சை அளித்திடவும் அரசுக்கு தேவையான உதவிகளை செய்திட விஐடி பல்கலைக்கழகம் தயாராக இருப்பதாகவும் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தெரிவித்துள்ளார். கடந்தாண்டும் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு விஐடி பல்கலைக் கழகம் சார்பில் ரூ. 1. 25 கோடி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.