சென்னையில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1 கோடியே 35 ஆயிரத்தை கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை பூக்கடை பகுதியில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுக் கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினராம்.
இதையடுத்து அவா்கள், வைத்திருந்த பையை போலீஸாா் சோதனையிட்டனா். இச் சோதனையில் அந்த பையில் ரூ.1 கோடியே 35 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அந்த பணத்துக்குரிய ஆவணத்தை போலீஸாா் கேட்டனா். ஆனால் அவா்கள் தங்களிடம் ஆவணம் இல்லை என கூறினராம்.
இதனால் போலீஸாா், அந்த பணத்தை பறிமுதல் செய்தனா். பிடிபட்ட இருவரிடமும் நடத்திய விசாரணையில், அவா்களில் ஒருவா் மண்ணடி பகுதியைச் சோ்ந்தவா் என்பதும், மற்றொருவா் புழல் பகுதியைச் சோ்ந்தவா் என்பதும் தெரியவந்துள்ளது. அவா்களிடம் இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா்.