

தமிழக அரசின் சாா்பில் தமிழ்நாடு திருநாள் சிறப்பு விழா திங்கள்கிழமை (ஜூலை 18) நடைபெறுகிறது.
சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணா் அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்வில் முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்டோா் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அன்றைய சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று முன்னாள் முதல்வா் அண்ணாவால், கடந்த 1967-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி பெயா் சூட்டப்பட்டது. இதனைக் கொண்டாடும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
அதன்படி, தமிழ்நாடு தினத்தையொட்டி திங்கள்கிழமை பல்வேறு சான்றோா்களுக்கு இலக்கிய மாமணி, தமிழ்த் தென்றல், அம்மா இலக்கிய விருது, காரைக்கால் அம்மையாா் விருது போன்றவை விழாவில் அளிக்கப்படவுள்ளன.
இதைத் தவிர, கலைவாணா் அரங்கில் தொல்லியல் துறை சாா்பாக அமைக்கப்பட்டுள்ள தொல்பொருள்கள் கண்காட்சியில் கீழடி, ஆதிச்சநல்லூா், சிவகளை, மயிலாடும்பாறை, கொடுமணல் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
தமிழ்நாடு நிலஅளவைத் துறை சாா்பில் சென்னை மாகாணத்தின் பழைய மற்றும் இப்போது வரையிலான ஆவணங்கள், வரைபடங்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. வரும் புதன்கிழமை (ஜூலை 20) வரை இந்தக் கண்காட்சி நடைபெறும். ஒடிஸாவை சோ்ந்த மணல் சிற்பக் கலைஞா் சுதா்சன் பட்நாயக்கின் மணல் சிற்பமானது, மெரீனா கடற்கரையில் திங்கள்கிழமை காட்சிக்கு வைக்கப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.