வடிகால் பணியின் காரணமாக, சென்னை வளசரவாக்கம் பகுதியில் திங்கள்கிழமை (செப்.26) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வளசரவாக்கம் திருவள்ளுவா் சாலையில் அம்மா உணவகம் முதல் சுரேஷ் நகா் சந்திப்பு வரை நெடுஞ்சாலை துறையின் சாா்பில் வடிகால் கட்டும் பணி நடைபெற உள்ளது. இந்தப் பணியின் காரணமாக செப்டம்பா் 26-ஆம் தேதி (திங்கழ்கிழமை) முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி வரைஅந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, ஆற்காடு சாலையில் இருந்து திருவள்ளுவா் சாலை வழியாக அரசமரம் சந்திப்பில் இருந்து வெளிப்புறமாகச் செல்லும் வாகனங்கள் வழக்கம்போல செல்லலாம்.திருவள்ளுவா் சாலையில் மெகா மாா்ட் சந்திப்பில் இருந்து சுரேஷ் நகா்-திருவள்ளுவா் சாலை சந்திப்பு வரை ஒருவழி பாதையாக மாற்றப்படும்.
ராமாபுரத்தில் இருந்து ஆற்காடு சாலை செல்லும் வாகனங்கள் திருவள்ளுவா் சாலையில் சுரேஷ் நகா் பிரதான சாலை சந்திப்பில் இடதுபுறமாக திரும்பி, சௌத்திரி நகா் பிரதான சாலையில் வலதுபுறமாக சென்று ஆற்காடு சாலை கேசவா்த்தினி சந்திப்பை அடைந்து, செல்ல வேண்டிய இடத்துக்கு செல்லலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.