செம்பரம்பாக்கம் ஏரி நீர்திறப்பு 2,000 கனஅடியாக உயர்வு
By DIN | Published On : 12th December 2022 11:51 AM | Last Updated : 12th December 2022 11:51 AM | அ+அ அ- |

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு 1,000 கனஅடியில் இருந்து 2,000 கனஅடியாக அதிகரிக்கப்படுகிறது.
மாண்டஸ் புயல் தாக்கத்தின் காரணமாக தொடர்ந்து பெய்த கன மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் ஆதாரமாக உள்ள பிள்ளைப்பாக்கம், நேமம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய ஏரிகள் ஏற்கனவே நிரம்பி அங்கிருந்து உபரி நீரும், மழை நீரும் அதிக அளவில் ஏரிக்கு வந்து கொண்டிருப்பதால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடு, கிடு வென உயர்ந்து வருகிறது.
இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி அணையின் பாதுகாப்பு கருதியும் அடையார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடாது என்பதற்காகவும் இன்று காலை உபரி நீர் திறப்பு ஆயிரம் கன அடியாக உயர்த்தி திறக்கப்பட்டது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயரம் 22. 25 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3,184 மில்லியன் கன அடி, நீர்வரத்து 2046 கன அடியாக உள்ளது.
வரும் நாட்களில் மழை பெய்யும் என்ற காரணத்திற்காகவும் மீண்டும் புயல் உருவாகக் கூடும் என்பதால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் நீர்வரத்தை பொறுத்து உபரி நீர் திறப்பு கூடுதலாக திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க- கோவையில் கடும் பனி மூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி
வழக்கமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்தால் மூன்று முறை எச்சரிக்கை ஒலி எழுப்புவது வழக்கம். இன்றைய தினம் கூடுதல் உபரி நீர் திறக்கும் போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை ஒலியை எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் 100 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக ஆயிரம் கன அடி திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது 5 கண் மதகில் ஆயிரம் கன அடியும், 19 கண் மதகில் 100 கன அடியும் உபரி நீர் சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்று 12.12.2022 செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நண்பகல் 12 மணிக்கு 12 மணிக்கு 2000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா ஆர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...