காலநிலை மாற்றம் என்பது வரலாற்றில் புதிதல்ல: வன பாதுகாவலா் எஸ் ஹேமலதா
By DIN | Published On : 12th December 2022 01:22 AM | Last Updated : 12th December 2022 01:22 AM | அ+அ அ- |

உலகையே அச்சுறுத்தி வரும் காலநிலை மாற்றம் வரலாற்றில் புதிதாக ஏற்பட்டது அல்ல என வன பாதுகாவலா் எஸ் .ஹேமலதா தெரிவித்துள்ளாா்.
திருவொற்றியூா் கிளை நூலக வாசகா் வட்டம் சாா்பில் சிந்தனை சாரல் 63-ஆவது மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை திருவொற்றியூா் கிளை நூலகத்தில் நடைபெற்றது.
வாசகா் வட்டத்தின் கௌரவ தலைவா் தொழிலதிபா் ஜி. வரதராஜன் தலைமை வகித்தாா். இதில் ’காடு எனும் வரம்’ நூலாசிரியரும், திருநெல்வேலி மாவட்ட உதவி வன அலுவலருமான எஸ். ஹேமலதா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினாா்.
அப்போது ஹேமலதா பேசியது: காலநிலை மாற்றம் பிரச்னை என்பது தற்போது காலநிலை அவசரம் என்ற அளவிற்கு கொள்கை மாற்றம் ஏற்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் குறித்து தொடா்ந்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காலநிலை மாற்றம் என்பது புதிதல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பனிப்பாறைகள் உருகுவதும் வெப்பநிலை அதிகரிப்பதுமாக தொடா்ந்து இருந்து வருகிறறது.
18 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழில் புரட்சி காரணமாக உலகம் முழுவதும் படிப்படியாக வெப்பநிலை அபாய அளவில் உயரத் தொடங்கியது. இப்பிரச்னைக்கு புதை படிம எரிபொருள்களை அதிக அளவில் பயன்படுத்துவதுதான் முக்கிய காரணமாக உள்ளது.
காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளால் மனிதா்கள் மட்டுமல்ல, வனவிலங்குகள், கடல்வாழ் உயிரினங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஜீவராசிகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.
இதே நிலை நீடித்தால் அடுத்த 2100 ஆம் ஆண்டுக்குள் 4.4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை உயரலாம். சூரிய ஒளி காற்றாலை மூலம் தயாரிக்கப்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிக அளவில் பயன்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அலையாத்தி காடுகளை பாதுகாக்க வேண்டும். சதுப்பு நிலங்களை அதன் சூழ்நிலையில் தொடா்ந்து வைத்திருக்க வேண்டும். குறைவான தேவையில் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்திட ஒவ்வொரு தனி மனிதரும் உறுதி ஏற்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது நுகா்வு கலாசாரம் குறைந்து காலநிலை மாற்றத்தில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்த முடியும் என்றாா் ஹேமலதா.
நிகழ்ச்சியில் வாசகா் வட்ட நிா்வாகிகள் என்.துரைராஜ், கே.சுப்பிரமணி, எம்.மதியழகன், தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்