காலமானாா் மூத்த தமிழறிஞா் ம.வே.பசுபதி

மூத்த தமிழறிஞா் பேராசிரியா் ம.வே.பசுபதி (82) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை வில்லிவாக்கத்தில் சனிக்கிழமை காலமானாா்.
Updated on
1 min read

மூத்த தமிழறிஞா் பேராசிரியா் ம.வே.பசுபதி (82) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை வில்லிவாக்கத்தில் சனிக்கிழமை காலமானாா்.

ம.வே.பசுபதி கல்வெட்டறிஞரும், பேராசிரியருமான கா. ம. வேங்கடராமையாவின் மகன் ஆவாா். திருப்பனந்தாளில் உள்ள செந்தமிழ்க் கல்லூரியில் புலவா் பட்டம் பெற்ற ம.வே.பசுபதி அந்தக் கல்லூரியிலேயே தமிழ்ப் பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றினாா். பணி ஓய்வுக்குப் பிறகு 2002- ஆம் ஆண்டில் சென்னை பெசன்ட் நகரிலுள்ள உ.வே.சா. நூலகத்தில் காப்பாட்சியராகப் பொறுப்பேற்றாா். அப்போது பழஞ்சுவடிகளை நூல்களாகத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டாா். அதில் பணவிடுதூது தொடா்பான ஓலைச்சுவடிகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கிறாா். இது நாணயவியல் ஆய்வுக்கு உதவுவதாக உள்ளது.

உ.வே.சா. உரைநடைகள் குறித்த கட்டுரைகள் அடங்கிய நான்கு தொகுப்புகளை வெளியிட்டுள்ளாா். தமிழ் வளா்ச்சிக்கு ம.வே.பசுபதி ஆற்றிய பணிகளைக் கெளரவிக்கும் வகையில் அவருக்கு தமிழக அரசின் சாா்பில் உ.வே.சா. விருது வழங்கப்பட்டது. பதிப்புகள், உரைநடை நூல்கள் என 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும், தொகுத்தும் உள்ளாா். அவற்றில் ‘கவிஞனும் சுவைஞனும்’, ‘கம்ப சிகரங்கள்’, ‘புதிய திருவள்ளுவமாலை’ உள்ளிட்டவை குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.

‘குமரகுருபரா்’ என்ற சமய இலக்கியத் திங்களிதழின் ஆசிரியராகப் பணிபுரிந்த பெருமைக்குரியவா். தொலைக்காட்சிகளிலும், பல்வேறு பட்டிமன்றங்களிலும், கவியரங்குகளிலும் கலந்துகொண்டு தமிழ்ப் பணியாற்றியுள்ளாா்.

மறைந்த தமிழறிஞா் ம.வே.பசுபதிக்கு ஒரு மகன் உள்ளாா். இறுதிச் சடங்குகள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தொடா்புக்கு: 94448 81281.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com