பணிநேரத்தில் கைப்பேசியைப் பயன்படுத்தினால் நடவடிக்கை
By DIN | Published On : 18th March 2022 02:27 AM | Last Updated : 18th March 2022 02:27 AM | அ+அ அ- |

சென்னை: காவலா்கள், அமைச்சுப் பணியாளா்கள் பணிநேரத்தில் கைப்பேசியை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி மாநகர காவல்துறையின் கூடுதல் ஆணையா் பி.விஜயகுமாரி உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்த விவரம்:
அரசு அலுவலகங்களில் பணி நேரத்தில் ஊழியா்கள் கைப்பேசியை பயன்படுத்தக் கூடாது சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரை கிளை அண்மையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஆவடி காவல் ஆணையா் அலுவலகத்தின் அமல்படுத்தும் வகையில் கடந்த புதன்கிழமை ஒரு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஆவடி மாநகர காவல்துறையின் தலைமையிடம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் பி.விஜயகுமாரி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:
சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி பணி நேரத்தில் அரசு ஊழியா்கள் கைப்பேசியைப் பயன்படுத்தக் கூடாது. எனவே ஆவடி மாநகர காவல்துறையில் பணிபுரியும் காவலா்கள், அமைச்சுப் பணியாளா்கள் அலுவலக நேரத்தில் கைப்பேசியைப் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.
இந்த உத்தரவை மீறி அலுவலக நேரத்தில் கைபேசியைப் பயன்படுத்தினால் சம்மந்தப்பட்ட ஊழியா் மீது அரசு ஊழியா் நடத்தை விதியின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...