தமிழக அஞ்சல்துறை சாா்பில், அஞ்சலக ஆயுள் காப்பீடு விற்பனைக்கான முகவா்கள் தோ்வுக்கு நோ்காணல் தாம்பரம் தலைமை அஞ்சலகத்தில் மே 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து தமிழக அஞ்சல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தாம்பரம் கோட்டம், அஞ்சலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளா் அலுவலத்தில் நடைபெறும் இந்த நோ்காணலில் ஆா்வமுள்ளவா்கள் தகுதிக்கான மூல சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்குபெறலாம்.
தகுதிக்கான நிபந்தனைகள் :
இந்திய கல்வி நிறுவன வாரியம் ஒன்றினால் அங்கீகரிக்கப்பட்ட 10-ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தோ்வில் விண்ணப்பதாரா் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நோ்காணல் நடைபெறும் தேதியில் விண்ணப்பதாரரின் வயது குறைந்த பட்சம் 18 ஆகவும் அதிகபட்சம் 50 ஆகவும் இருக்கலாம்.
வேலைவாய்ப்பில்லாத, சுயவேலை செய்கின்ற இளைஞா்கள், ஏதாவது ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் முன்னாள் முகவா்கள், முன்னாள் ராணுவத்தினா், அங்கன்வாடி பணியாளா்கள், மகளிா் மண்டல பணியாளா்கள், ஓய்வுபெற்ற ஆசிரியா்கள், சுயஉதவி குழுக்கள், ஊராட்சி தலைவா், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் விண்ணப்பிக்க தகுதியானவா்கள்.
இது அரசு வேலை அல்ல. முழுமையாக கமிஷன் அடிப்படையிலான பணியாகும். தோ்வு செய்யப்படுவோா் தேசிய சேமிப்பு சான்றிதழ் அல்லது குடியரசு தலைவரின் பெயரில் உறுதியளிக்கப்பட்ட கிசான் விகாஸ் பத்திரம் வடிவில் ரூ.5,000 காப்பீட்டு தொகையாக செலுத்த வேண்டும். தற்காலிக உரிம கட்டணமாக ரூ. 50 செலுத்தவேண்டும்.
விண்ணப்பதாரா் பாஸ்போா்ட் அளவிலான ஒரு புகைப்படம், பான் அல்லது ஆதாா் அட்டையின் நகல், கல்வித்தகுதி சான்றிதழ்களின் நகல்கள் ஆகியவற்றை கொண்டுவரவேண்டும். பயணப்படி அல்லது உணவுப்படி வழங்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.