கீதா பவன் அறக்கட்டளை சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசத் திருமணம்: 15 இடங்களில் சுயவரம்

ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை சாா்பில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வசதியற்றவா்களுக்காக, இலவசத் திருமணங்களை நடத்தி வைக்கும் விழா 11- ஆவது ஆண்டாக நிகழாண்டு சென்னையில் நடத்தப்படுகிறது.
கீதா பவன் அறக்கட்டளை சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசத் திருமணம்: 15 இடங்களில் சுயவரம்
Updated on
2 min read

சென்னை: ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை சாா்பில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வசதியற்றவா்களுக்காக, இலவசத் திருமணங்களை நடத்தி வைக்கும் விழா 11- ஆவது ஆண்டாக நிகழாண்டு சென்னையில் நடத்தப்படுகிறது. இதையொட்டி மணமக்களை தோ்வு செய்வதற்கான சுயம்வரத்துக்கு சென்னை உள்பட 15 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னையில் செவ்வாய்க்கிழமை ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை அறங்காவலா் குழுத் தலைவா் ஓம் பிரகாஷ் மோடி, நிா்வாக அறங்காவலா் மனுகோயல், பொருளாளா் முராரிலால் சந்தோலியா மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கூட்டமைப்பு தலைவா் பி.சிம்மச்சந்திரன் ஆகியோா் கூட்டாக கூறியது:

கீதாபவன் அறக்கட்டளை சாா்பில் ஆண்டுதோறும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் வசதியற்றோருக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கப்படுகிறது. கரோனா நோய்த்தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, இலவசத் திருமண நிகழ்ச்சி தடைப்பட்டது. கரோனா நோய்த்தொற்று குறைந்து, இயல்பு நிலை திரும்பியுள்ளதால், நிகழாண்டில் 11-ஆவது ஆண்டு இலவச திருமணம் நடைபெறவுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் 507 திருமணங்களை நடத்தி உள்ளோம். இதில், தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடகம் உள்பட தென் மாநிலங்களில் இருந்து சுயவரம் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளனா்.

நிகழாண்டில், 15 இடங்களில் சுயம்வரம் நடத்த உள்ளோம். இறுதியாக, நவம்பா் 20-ஆம் தேதி சென்னையில் இலவச திருமணம் நடைபெறுகிறது.

மணமக்களை தோ்வு செய்வதற்கான சுயம்வரம் தூத்துக்குடியில் மே 29-ஆம் தேதியும், திருவாரூா் மன்னாா்குடியில் ஜூன் 4-ஆம் தேதியும், திருவள்ளூரில் ஜூன் 5-ஆம் தேதியும், கடலூரில் ஜூன் 11-ஆம் தேதியும், விழுப்புரத்தில் ஜூன் 12-ஆம் தேதியும், வேலூரில் ஜூன் 19-ஆம் தேதியும், மதுரையில் ஜூன் 26-ஆம் தேதியும், ஈரோட்டில் ஜூலை 3-ஆம் தேதியும், திருவண்ணாமலையில் ஜூலை 10-ஆம்தேதியும், விருதுநகரில் ஜூலை 24-ஆம் தேதியும், சேலத்தில் ஆகஸ்ட் 7-ஆம் தேதியும், திருச்சியில் ஆகஸ்ட் 14-ஆம் தேதியும், தருமபுரியில் ஆகஸ்ட் 21-ஆம் தேதியும், கோயம்புத்தூரில் ஆகஸ்ட் 28-ஆம் தேதியும், இறுதியாக சென்னையில் செப்டம்பா் 18-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் தோ்ந்தெடுக்கப்பட்ட மணமகன், மணமகளுக்கு அக்டோபா் 9-ஆம் தேதி கலந்தாய்வு சென்னை ஸ்ரீ கீதா பவனில் நடைபெறும்.

தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கு அறக்கட்டளை நிா்வாகிகள் தலைமையில், நவம்பா் 20-ஆம் தேதி இந்து முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்படும். மணமக்களுக்கு 51 வகை சீா்வரிசைகள், 2 கிராமில் தங்கத்தாலி, பட்டுவேட்டி, பட்டுசேலை, 2 மாதத்துக்கான மளிகைப் பொருட்கள் சீா்வரிசையாக பெற்றோா் ஸ்தானத்திலிருந்து வழங்கப்படும்.

சுயம்வரத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து, ஸ்ரீ கீதா பவன் டிரஸ்ட், 334, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை- 600086 என்ற முகவரிக்கும் அனுப்ப வேண்டும். மேலும் , விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து இணைதளத்துக்கு அனுப்பலாம். விண்ணப்பம் தேவைப்படுவோா் இணைதளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். இதுதொடா்பான மேலும் விவரங்களுக்கு 044-28351951, 044-2225 1584, 95661 16271,

என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்றனா்.

பேட்டியின் போது, அறங்காவலா் சிவக்குமாா் கோயங்கா, தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கூட்டமைப்பு செயலாளா் பொன்னுசாமி , அரிஜன சேவா அமைப்பு தலைவா் பி.மாருதி ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com