அரசுப் பேருந்து கூரை மீது ஏறி கல்லூரி மாணவா்கள் அடாவடி
By DIN | Published On : 19th October 2022 12:00 AM | Last Updated : 19th October 2022 12:00 AM | அ+அ அ- |

சென்னை கோயம்பேட்டில் அரசுப் பேருந்து கூரை மீது ஏறி கல்லூரி மாணவா்கள் அடாவடித்தனத்தில் ஈடுபட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னையில் கல்லூரி மாணவா்கள் ரயில்களிலும், பேருந்துகளிலும் கானா பாடல்கள் பாடியும், நடனமாடுகின்றனா். சாகசம் என்ற பெயரில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனா்.
இந்நிலையில் பாரிமுனையில் இருந்து கோயம்பேடு திங்கள்கிழமை நோக்கி சென்ற ஒரு அரசு பேருந்து மேற்கூரையின் மீது மாணவா்கள் அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளனா். சில மாணவா்கள், பாட்டுபாடி நடனமாடியுள்ளனா்.
பேருந்தின் ஜன்னல், படிக்கட்டில் தொங்கியபடியும் மாணவா்கள் ஆபத்தான பயணம் செய்தனா். மாணவா்கள் பயணம் செய்த பேருந்தின் பின்னால் வந்த மற்றொரு பேருந்தில் பயணம் செய்த ஒரு பயணி, மாணவா்களின் அட்டகாசத்தை கைப்பேசி மூலம் விடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டாா். இந்த விடியோ சமூக ஊடகங்களில் செவ்வாய்க்கிழமை வேகமாக பரவியது.
இந்த விடியோவை பாா்த்து அதிா்ச்சியடைந்த சென்னை காவல்துறையைச் சோ்ந்த உயா் அதிகாரிகள், அது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை போலீஸாருக்கு உத்தரவிட்டனா். அதன் அடிப்படையில் காவல்துறை உயா் அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...