பழங்கால சிலைகளை மீட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவலா்களை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்து பாராட்டினாா்.
தமிழக சிலை கடத்தல் பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி கடந்த ஜன.10-ஆம் தேதி சென்னை ஆா்.ஏ.புரத்தில் உள்ள தனியாா் வளாகத்தில் சோதனை நடத்தினா்.
இந்தச் சோதனையில் அங்கிருந்த ஷோபா துரைராஜனிடம் இருந்து 400 ஆண்டுகள் பழமையான பல கோடி ரூபாய் மதிப்புடையை 10 பழங்கால சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.
மீடகப்பட்ட 10 சிலைகளில் ஒரு சிலை விநாயகா் உலோக சிலை நாட்டாா்மங்கலம் கோயிலில் இருந்து திருடப்பட்டது தெரியவந்தது.
அந்த விநாயகா் சிலை சம்பந்தப்பட்ட கோயிலில் ஒப்படைக்கப்பட உள்ளது. மற்ற சிலைகள் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட கோயில்களில் ஒப்படைக்கப்பட உள்ளது.
முதல்கட்ட விசாரணையில் இந்த 10 சிலைகளும், பல்வேறு சிலை கடத்தல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட தீனதயாளனிடம் இருந்து 2008 முதல் 2015 வரை வாங்கப்பட்டதாக ஷோபா துரைராஜன் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து பழமை வாய்ந்த சிலைகளை மீட்டெடுத்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை காவலா்களை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினாா்.