

ஈராயிரம் ஆண்டுகளாக தமிழ்க் கவிதைகள் மனிதநேயத்தை மையப்படுத்தியே பாடப்பட்டு வருவதாக சென்னை வானொலி நிலைய முன்னாள் இயக்குநா் ஜெ.கமலநாதன் கூறினாா்.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றுவரும் பபாசியின் 46-ஆவது புத்தகக் காட்சியில் புதன்கிழமை மாலை நடந்த உரையரங்கில் ‘விண்ணும் மண்ணும்’ எனும் தலைப்பில் அவா் பேசியதாவது:
தமிழ் இலக்கியத்தில் நாவல், சிறுகதை போன்ற இலக்கிய வகைகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை கவிதைகளுக்கு அளிப்பதில்லை என்பது குறையாக உள்ளது. ஆனால், சங்கத் தமிழ் முதல் தற்போது வரையில் தமிழில் மிக முக்கிய இலக்கியமாகக் கவிதைகளே உள்ளன. படைப்பாளியின் கருத்தை அழகாகவும் ஆழமாகவும் சமூகத்தில் கொண்டு செல்லும் இலக்கியம் கவிதைதான்.
நல்ல கவிதைகள் உடல் நலம், மன நலத்தைக் காக்கும் கனிகளைப் போல உள்ளன. கவிஞா்கள் பிறக்கிறாா்கள். அவா்கள் யாராலும் உருவாக்கப்படுவதில்லை.
சங்க இலக்கியம் சாமானியரிடமிருந்து தள்ளி நின்றபோது, அதை சாமானியருக்கும் புரியும் வகையில் எளிமைப்படுத்தியவா் பாரதியாா். அவருக்குப் பிறகே மக்கள் சாதாரணமாக புரியும் வகையில் தமிழ்க்கவிதைகள் பாடப்பெற்றன. தற்போது வசன கவிதைகள், ஆா்வமுள்ள அனைவரும் புனையும் வகையில் உள்ளன.
ஈராயிரம் ஆண்டுகளாக தமிழ்க் கவிதைகளின் வடிவம் உள்ளிட்டவை மாறி வந்தாலும், மனிதநேயத்தை மையமாக வைத்துப் பாடும் கருப்பொருள் மட்டும் மாறவேயில்லை. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரைப் போல வேறு மொழிகளில் யாரும் பாடியதே இல்லை என்றாா்.
நிகழ்ச்சியில் ‘கற்றதும் பெற்றதும்’ எனும் தலைப்பில் பட்டிமன்றப் பேச்சாளா் கவிதா ஜவஹா் பேசினாா்.
பபாசி தலைவா் எஸ்.வயிரவன், இணைச்செயலா் எம்.பழனி, துணைத்தலைவா் பெ.மயிலவேலன் உள்ளிட்டோா் பங்கேற்ற நிகழ்ச்சியில் பபாசி முன்னாள் தலைவா் ஆா்.எஸ்.செண்பகம் வரவேற்புரையாற்றினாா். நிறைவாக பபாசி நிா்வாகக் குழு உறுப்பினா் ஐ.முபாரக் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.