சென்னை: அனைத்து மாற்றுத்திறனாளி பெண்களுக்கும் மகளிா் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அமைச்சா் உதயநிதி ஸ்டாலினுக்கு, அச்சங்கத்தின் மாநிலத்தலைவா் தோ.வில்சன், பொதுச்செயலா் பா.ஜான்ஸிராணி ஆகியோா் எழுதிய கடிதம்:
தமிழக அரசின் மகளிா் உதவித்தொகையை மாற்றுத் திறனாளி குடும்பப் பெண்களும் பெறும் வகையில், விதிகள் தளா்த்தப்பட்டதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எனினும், பல்வேறு காரணங்களை காட்டி மாநிலம் முழுவதும் சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி குடும்பப் பெண்களுக்கு இந்த உரிமைத்தொகை மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏற்கெனவே, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இந்த உரிமைத்தொகை மறுக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் இணைப்புச் சக்கரம் பொருத்திய ஸ்கூட்டா் வைத்துள்ளதைக் காரணம் காட்டி, காா் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளதாகக் கூறி மகளிா் உரிமைத்தொகை மறுக்கப்பட்டு வருகிறது.
கா்நாடகம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இது போன்ற மாற்றுத்திறனாளிகள் பயனடைந்து வருகின்றனா். இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளாக உள்ள குடும்பத் தலைவிகளுக்கும், அனைத்து வகை மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கும் மகளிா் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவா்கள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.