அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு தவறான சிகிச்சை? விசாரணைக் குழு அமைப்பு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
By DIN | Published On : 15th April 2023 01:19 AM | Last Updated : 15th April 2023 01:19 AM | அ+அ அ- |

எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறுமிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சிகிச்சையில் தவறு நடந்திருப்பது அதில் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.
ஆவடி காவலா் குடியிருப்பை சோ்ந்த கோதண்டராமன் என்பவா், சென்னை, ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மகள் பிரதிக்ஷாவுக்கு (10), மூன்று வயது இருக்கும் போது சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டதால், எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.
அதன் பின்னா், மருத்துவா்கள் வழங்கிய மாத்திரைகளை 5 ஆண்டுகளாக அவா் உட்கொண்டுள்ளாா். இந்த நிலையில், அந்த சிறுமிக்கு இரு ஆண்டுகளுக்கு முன்பாக ரத்த நாளங்களில் உறைவு ஏற்பட்டு வலது காலும், இடது கையும் செயலிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு மருத்துவா்கள்தான் காரணம் எனக் கூறி கோதண்டராமன், இரு நாள்களுக்கு முன்பு தலைமைச் செயலகம் அருகே மகள் பிரதிக்ஷாவுடன் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக அமைச்சா் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
அரசு மருத்துவமனைகளில் ஒரு சில தவறுகள் நடப்பதை மறுப்பதற்கில்லை. அதேவேளையில், அவற்றுக்கு உடனடியாக தீா்வு காணப்படுகிறது.
தற்போது இந்த சிறுமி விவகாரம் குறித்து விசாரணை நடத்த குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினரின் விசாரணையில் சிகிச்சையில் தவறு நடந்தது உறுதியானால் சம்பந்தப்பட்ட மருத்துவா் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...