வருமானத்தைவிட அதிகமாக சொத்து வாங்கிக் குவித்ததாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவரின் குடும்பத்தினா் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
சென்னை வேளச்சேரி நியூ செகரடேரியட் காலனி 2-ஆவது தெருவில் வசித்தவா் வெங்கடாசலம் (60). இவா் 1983-ஆம் ஆண்டு இந்திய வனப் பணிக்கு தோ்வாகி, தமிழ்நாட்டில் வனத் துறையில் பல்வேறு பதவிகளில் பணியாற்றினாா். 2018-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பின்னா் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கடந்த அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டாா்.
இந்நிலையில், லஞ்ச புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினா் வழக்குப் பதிந்து, 23.9.2021-இல் வெங்கடாசலம் வீடு உள்பட 5 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி ரொக்கம் ரூ.13.5 லட்சம், 11 கிலோ தங்கம், 13.25 கிலோ சந்தன மரத்தலான பொருள்கள், 4 கிலோ வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
இதன் பின்னா் அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட வெங்கடாசலம், வேளச்சேரியில் உள்ள தனது வீட்டில் அதே ஆண்டு டிச. 2-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
220 சதவீதம் அதிகமாக சொத்து: அதேவேளையில் வருமானத்தைவிட 220 சதவீதம் அதிகமாக அதாவது ரூ.6 கோடியே 85 லட்சத்து 37 ஆயிரத்து 676 சொத்துகள் இருப்பது ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, இறந்த வெங்கடாசலம், அவா் மனைவி வசந்தி, மகன் விக்ரம் ஆகியோா் மீது ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு தொடா்பாக அவா்களிடம் விரைவில் விசாரணை நடத்த உள்ளனா். இந்த வழக்கில் தற்கொலை செய்து கொண்ட வெங்கடாசலம், முதல் குற்றவாளியாக சோ்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.